வங்கதேசத்தைப் போல இலங்கையில் இந்தியா தலையிட வேண்டும்: அதிமுக
சென்னை: வங்கதேசத்தில் தலையிட்டு அங்கு அமைதியை ஏற்படுத்தியதைப் போல, இலங்கை விவகாரத்திலும் இந்தியா தலையிட்டு தமிழர்களைக் காக்க வேண்டும், அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று சட்டசபை அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டசபையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இலங்கையில் அமைதி ஏற்படுத்தும் கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உள்ளது.
வங்கதேசத்தில் இந்தியா தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியது. அதேபோல இலங்கையிலும் தலையிட்டு தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
இலங்கைப் பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு காண மத்திய அரசை திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
போர் நிறுத்தம் முதலில் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர் இரு தரப்பினரையும் இந்தியாவுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் அதே சமயத்தில், கச்சத்தீவை மீட்டு, தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் அவலத்திற்கும் முடிவு கட்ட வேண்டும் என்றார்.
ஜி.கே.மணி
பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், உலகின் எந்த நாட்டிலும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இனப் பிரச்சினை நீடித்து வருவது இதுவே முதல் முறையாகும்.
நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு இலங்கை அரசு சம்மதிக்க வேண்டும். அப்படி அது செய்ய மறுத்தால், இலங்கை மீது இந்தியா பொருளாதார தடையை அறிவித்து நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் என்றார்.