திருவாரூரில் எம்.ஜி.ஆர். சிலை சேதம் - ஜெ. கண்டனம்
சென்னை: திருவாரூர் மாவட்டம் சீரங்குளம் என்ற இடத்தில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பத்து ஆண்டுகளாக சீரங்குளம் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலை சில விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுகவினர் போராட்டம் நடத்தியும் கூட போலீஸார் இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படிப்பட்ட விஷமிகள் மீது மாநில அரசு மென்மையான போக்கைக் கையாண்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள தலைவர்களின் சிலைகள், வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகளைக் காக்க திமுக அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.