தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி இலங்கை கடற்படை சித்திரவதை
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி, அடித்து, உதைத்து மீண்டும் இலங்கை கடற்படை சித்திரவதை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளி வரும் இலங்கை கடற்படை தற்போது நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யும் புதிய உத்திக்கு மாறியுள்ளது.
சமீபத்தில் ராமேஸ்வரம் மீனவர்களைப் பிடித்து நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து, இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவி திரட்டினால் சுட்டுக் கொன்று கடலில் தூக்கிப் போட்டு விடுவோம் என மிரட்டியது சிங்கள கடற்படை.
இந்த நிலையில் மீண்டும் இதேபோன்ற சித்திரவதையை அது நிகழ்த்தியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு 500 படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 5 படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்து சூழ்ந்தனர்.
பின்னர் ராமேஸ்வரம் மீனவர்கள் இருந்த படகுகளை ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடையச் செய்தனர்.
பின்னர் கத்தியால் மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்தனர். பிறகு மீனவர்களை துப்பாக்கியின் பின்பகுதியால் தாக்கினர். சில மீனவர்களை ஆடைகளைக் களையச் செய்து நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்தனர்.
பின்னர் சரமாரியாக தமிழக மீனவர்களை கடற்படையினர் தாக்கினர். இதில் கிறிஸ்டோர், ஜோதிபாசு, வினிஷ்டன், கார்பசேவ் ஆகியோர் காயமடைந்தனர்.
பின்னர் தமிழக மீனவர்களை கடுமையாக எச்சரித்து விட்டு கடற்படையினர் அங்கிருந்து சென்றனர். இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.
சிங்கள மீனவர்கள் இப்படி அடிக்கடி சித்திரவதை செய்வது தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.