சட்டசபை தேர்தல் வெற்றி எதிரொலி- முன்கூட்டியே லோக்சபாவுக்கு தேர்தல்?
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் ராஜஸ்தானில் பாஜகவிடமிருந்தும், மிஸோரமில் மிஸோ தேசிய கூட்டணியிடமிருந்தும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
மேலும், கண்டிப்பாக காங்கிரஸ் தோற்று விடும் என பாஜகவினரால் பலமாக நம்பப்பபட்ட நிலையில், டெல்லியில், அட்டகாசமாக ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது காங்கிரஸ். 3வது முறையாக இங்கு காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.
ராஜஸ்தானில் ஆட்சியை நழுவ விட்ட பாஜக மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டது.
இந்த எதிர்பாராத வெற்றியால் உற்சாகமடைந்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், லோக்சபா தேர்தலை இதே சூட்டில் வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர்.
ஏப்ரல் - மே மாதம் வரை காத்திருக்கத் தேவையில்லை. முன்கூட்டியே, அதாவது பிப்ரவரி மாதமே தேர்தலை நடத்தி விடலாம் என்ற எண்ணத்திற்கு காங்கிரஸும் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்லியை வென்றது இந்தியாவையே வென்று போலாகும்.
நல்லாட்சி, மாநில வளர்ச்சி ஆகியவற்றை முன் வைத்து தேர்தலை சந்தித்தது காங்கிரஸ். ஷீலா தீட்சித்தின் தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றிக்கு தீட்சித் ஆட்சி கொடுத்த நல்லாட்சியும், டெல்லியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியுமே காரணம்.
மாறாக பாஜகவினர் தீவிரவாதத்தை பிரச்சினையாக்க முயன்றனர். அதில் தோல்வியுற்றுள்ளனர்.
நாட்டுக்கு தீவிரவாதமும், மதவாதமும் பெரும் மிரட்டல்களாக உள்ளன. அவற்றை காங்கிரஸ் ஒடுக்கும்.
தற்போதைய தேர்தல் முடிவிலிருந்து காங்கிரஸ் பலமடைந்திருப்பது தெளிவாகியுள்ளது. எனவே முன்கூட்டியே கூட (பிப்ரவரியில்) நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வரலாம்.
அரசியலில் அனைத்துமே சாத்தியம்தான். விரைவில் இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
லோக்சபா தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணியே வெல்லும், காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியமைக்கும். இதை யாரும் தடுக்க முடியாது என்றார் மொய்லி.