சட்டசபைத் தேர்தல் முடிவில் திருப்தி - மாயாவதி
லக்னோ: ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நான் எதிர்பார்த்ததுதான். பகுஜன் சமாஜ் கட்சி இந்தத் தேர்தலில் திருப்திகரமான முடிவுகளைப் பெற்றுள்ளது என்று உ.பி முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி கூறியுள்ளார்.
இதுகுறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையி்ல் உள்ளது.
மிஸோரம் தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். எங்களது வாக்கு வங்கி அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், கூடுதல் சீட்களையும் வென்றுள்ளோம்.
ராஜஸ்தானில் கடந்த 2003ம் ஆண்டு தேர்தலில் 2 இடங்களில் வென்றோம். ஆனால் இம்முறை 6 சீட் கிடைத்துள்ளது. வாக்கு சதவீதமும் 3.9சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில், 2003ம் ஆண்டு 7.2 சதவீத வாக்குகளுடன் 2 சீட்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால் தற்போது 7 சீட்களை வென்றதோடு, வாக்கு சதவீதமும் 11 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதேபோல டெல்லியில் 2003 தேர்தலில் எங்களுக்கு சீட் எதுவும் கிடைக்கவில்லை. வாக்கு சதவீதமும் 5.7 ஆக இருந்தது. ஆனால் தற்போது 2 சீட்களையும் வென்று, வாக்கு சதவீதத்தையும் 12 ஆக அதிகரித்துள்ளோம்.
இங்கு கூடுதல் சீட்களை நாங்கள் எதிர்பார்த்தது உண்மைதான். ஆனால் காங்கிரஸும், பாஜகவும் வாக்காளர்களை குழப்பும் தந்திர பிரசாரத்தில் ஈடுபட்டதால் எங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு விட்டது.
இருப்பினும் தேர்தல் முடிவு எங்களுக்கு எந்த வருத்தத்தையும் தரவில்லை. திருப்திகரமாகவே இருக்கிறது. பல தொகுதிகளில் எங்களது வேட்பாளர்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் தோற்றுள்ளனர். எனவே இதை நாங்கள் பாதகமாக நினைக்கவில்லை என்றார் மாயாவதி.