பொன்சேகா திமிர் பேச்சு - இந்தியா கண்டனம் - இலங்கை வருத்தம்
டெல்லி: தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருப்பது குறித்து இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவிடம் இந்தியா இன்று கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து பொன்சேகா பேச்சுக்கு கோத்தபயா வருத்தம் தெரிவித்தார்.
தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள். அவர்களது பேச்சையெல்லாம் பிரதமர் மன்மோகன் சிங் கேட்க மாட்டார் என ராணுவத் தளபதி பொன்சேகா கூறியிருந்தார்.
இது தமிழகத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் கருணாநிதி, வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியத் துணைத் தூதர் அலோக் பிரசாத் கொழும்பில், பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவை சந்தித்து பொன்சேகா பேச்சுக்கு கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தார்.
இதுகுறித்து வெளியுறவு த்துறை செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை பாதுகாப்பு செயலாளரிடம், நமது துணைத் தூதர் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளார். அவர் இதுகுறித்துக் கவனிப்பதாக உறுதியளித்தார். அப்படி ஏதாவது கருத்து வெளிப்படுத்தப்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாகவும் கோத்தபயா ராஜபக்சே தெரிவித்தார் என்றார்.