மத்தியப் பிரதேச முதல்வராக செளகான் டிச. 12ல் பதவியேற்பு
போபால்: மத்தியப் பிரதேச முதல்வராக சிவராஜ் செளகான் டிசம்பர் 12ம் தேதி பதவியேற்கவுள்ளார்.
மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் 60 சதவீதத்திற்கும் மேலான சீட்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது பாஜக. சிவராஜ் செளகானின் சிறப்பான பணியைப் பாராட்டி மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் ம.பி. மக்கள்.
இதையடுத்து வருகிற 12ம் தேதி சிவராஜ் செளகான் 2வது முறையாக முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.
நாளை காலை சட்டசபை பாஜக தலைவராக செளகான் முறைப்படி தேர்வு செய்யப்படவுள்ளார். அதன் பின்னர் கட்சி மேலிடத்துடன் அமைச்சர்கள் நியமனம் குறித்து ஆலோசிக்கவுள்ளார் செளகான். பின்னர் வெள்ளிக்கிழமை அவர் முதல்வராகப் பதவியேற்பார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் ம.பியில் பாஜக வெற்றி பெற்றபோது உமாபாரதி முதல்வராகப் பதவியேற்றார். பின்னர் ஹூப்ளி விவகாரத்தி்ல் அவருக்கு சிக்கல் ஏற்படவே 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். பாபுலால் கெளர் முதல்ரானார்.
பின்னர் கெளருக்கு மக்கள் மத்தியிலும், கட்சி வட்டாரத்திலும் அதிருப்தி எழவே அவரும் ராஜினாமா செய்தார். இதையடுத்து 2005ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி முதல்வரானார் செளகான்.
தனது திறமையான நிர்வாகத்தால் ம.பி மக்களின் மனம் கவர்ந்த முதல்வராக திகழ்ந்த செளகான் அந்த நற்பெயராலால் கடும் எதிர் பிரசாரத்தையும் மீறி சிறப்பான வெற்றியை பாஜகவுக்கு ஈட்டித் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.