ஆட்சியின் சாதனைகள் - படங்கள் தயாரிக்கும் மாயாவதி
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பதவிக்காலம் விரைவில் முடியவிருப்பதை அடுத்து, வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாராளுமன்ற ஜூரம் ஒவ்வொரு கட்சியினரையும் வாட்டி வருகி்றது. ஒவ்வொரு கட்சியினரும் வெற்றிக்கான திட்டத்தை வகுத்து வருகின்றனர்.
இதில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உ.பி முதல்வருமான மாயாவதி ஆக்ஷன், அதிரடியில் குதித்துள்ளார். தென்னிந்திய அரசியல்வாதிகளைப் போல சினிமாவை கையில் எடுத்துள்ளார்.
தனது ஆட்சியில் நடந்த சாதனைகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தீட்டப்பட்ட திட்டங்களை விவரித்தும், கடந்த முலாயம் சிங் யாதவின் ஆட்சி எப்படி குண்டர் ராஜ்ஜியமாக இருந்தது, கொள்ளைக்காரர்களையும், கிரிமினல்களையும் அவரது ஆட்சி எப்படியெல்லாம் ஆதரித்தது, அவர்களையெல்லாம் மாயாவதி எப்படி ஒடுக்கினார் என்பதை விவரிக்கும் வகையில் எட்டு குறும் படங்களை தயாரிக்க உத்தரவிட்டுள்ளார் மாயாவதி.
உ.பி.மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை இந்த படங்களைத் தயாரித்துள்ளது.
மாயாவதியின் முதல் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாநில அரசு வெளியிட்ட புத்தகத்தை தழுவி இப்படம் தயாரிக்கப்படுகிறது.
இவற்றில் ஒரு படம் 25 முதல் 30 நிமிடமும், 6 படங்கள் ஒரு நிமிடமும், ஒரு படம் 4 நிமிடமும் ஓடும்.
இவற்றை உபி முழுவதும் சில சினிமா தியேட்டர்கள் மற்றும் மொபைல் தியேட்டர்கள் மூலம் மக்களுக்கு திரையிடவுள்ளனராம்.
கிராம மக்களை குறி வைத்து இந்தப் படங்களை தயாரித்துள்ளார் மாயாவதி.
மாநிலத்தில் சட்ட ஒழுங்கை காப்பாற்ற தவறிவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த படங்கள் அவர்களுக்குப் பதிலடி தரும், தனது செல்வாக்கை மக்கள் மத்தியில் உயர்த்தும் என மாயாவதி நம்புகிறார்.
இப்படங்களின் மூலம் மாயாவதி அரசு கிரிமினல்களை சும்மா விடாது என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்று பகுஜன் சமாஜ் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பாலிவுட் ஸ்டைலில் மாயாவதி தயாரித்துள்ள இந்தப் படங்களில் சில மாற்றங்களை அரசு மூத்த உயர் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனராம். அவற்றை தற்போது சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். முடிந்ததும், அடுத்த வாரம் மக்களுக்குக் காட்டப் போகிறார்களாம்.