மதுவிலக்கு-சென்னையில் தங்கபாலு உண்ணாவிரதம்
சென்னை சேப்பாக்கத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களுடன் அவர் உண்ணாவிரதம் இருக்கிறார்.
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். இதில் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்பி கலியபெருமாள், முன்னாள் எம்எல்ஏக்கள் கோவை செல்வராஜ், பொன்னம்மாள் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நிருபர்களிடம் தங்கபாலு பேசுகையில்,
தமிழகத்தில் விவசாயிகள் சங்கம் கள் இறக்கும் போராட்டம் அறிவித்திருப்பது தாய்மார்களையும், இளைஞர்களையும் பாதிக்கக்கூடிய விஷயமாகும்.
மது பழக்கம் தமிழகத்தை சீரழித்து விடும். மேலும் தமிழக வரலாற்றில் மீண்டும் ஒரு கறைபடிந்த சம்பவத்தை உருவாக்கும். மகாத்மா காந்தி, காமராஜ், பெரியார் ஆகியோர் போராடி தங்களது வாழ் நாளில் மதுவிலக்கை கொண்டு வந்து மக்கள் நலனுக்காக வரலாறு படைத்தார்கள்.
கள் என்பது மனிதனை மயக்கும். சிலர் அதனை உணவுப்பொருள் என தவறான செய்தியை தமிழக மக்களிடையே பரப்புகிறார்கள். கள் இறக்கும் போராட்டத்தை விவசாயிகள் சங்கம் கைவிட வேண்டும்.
விவசாயிகளுக்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. மத்திய அரசு ரூ.70,000 கோடியும், மாநில அரசு ரூ.7,000 கோடியும் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்துள்ளது.
மத்திய, மாநில அரசு விவசாயிகளுக்கு எதிரி அல்ல என்றார்.