காதலர் தினத்தை எதிர்க்கும் ஸ்ரீராம் சேனாவுக்கு ஜட்டி அனுப்பும் போராட்டம்
பெங்களூரைச் சேர்ந்த மாற்று சட்ட இயக்கம் என்ற அமைப்பு இந்த நூதனப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. பப்களுக்குப் போகும் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறதாம்.
கடந்த 5ம் தேதி இந்த ஜட்டி அனுப்பும் போராட்டம் தொடங்கப்பட்டது. இதுகுறித்து அந்த அமைப்பு தெரிவிக்கையில், காதலர் தினத்தையும், பப்களுக்குப் பெண்கள் போவதையும் எதிர்க்கும் ஸ்ரீராம் சேனாவுக்கு நமது எதிர்ப்பைக் காட்டவும், பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் இந்தப் போராட்டம்.
இதில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது வீட்டில் உள்ள பிங்க் நிற பெண்களின் ஜட்டிகளை அல்லது கடைகளுக்குச் சென்று பிங்க் நிறத்திலான ஜட்டிகளை மிக மிக குறைந்த விலையாக பார்த்து வாங்கி அதை ஸ்ரீராம் சேனாவுக்கு அனுப்பி வையுங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி:
பிரமோத் முத்தலிக்
ஸ்ரீராம் சேனா அலுவலகம்
11, புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம்,
கோகுல் சாலை, ஹூப்ளி.
ஜட்டிகளை முத்தலிக்குக்கு தபாலில் அனுப்ப விரும்பாதவர்கள், எங்களது கலெக்ஷன் பாயிண்டுகளில் அதைக் கொடுக்கலாம். நாங்கள் அவற்றைப் பெற்று சேனாவுக்கு அனுப்பி வைப்போம்.
பிப்ரவரி 12ம் தேதி அனைத்து ஜட்டிகளும் ஸ்ரீராம் சேனாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும் விவரம் அறிய விரும்புவோர் இந்த பிளாக்கை அணுகலாம்
http://thepinkchaddicampaign.blogspot.com/
இதுதவிர காதலர் தினத்தன்று பப்களுக்கு அனைவரும் சென்று அங்கு இருக்கும் பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர்களுடன் சேர்ந்து மதுவோ அல்லது அந்தப் பழக்கம் இல்லாதவர்கள் ஜூஸோ அருந்தி ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
அவற்றை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள். அதையும் ஸ்ரீராம் சேனாவுக்கு நாங்கள் அனுப்பி வைக்கிறோம் என்று பிங்க் ஜட்டி பிரசாரத்தின் பொறுப்பாளரான நிஷா சூசன் தெரிவித்துள்ளார்.
டெல்லி, மும்பை, சென்னை, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஜட்டிகளை கலெக்ட் செய்யவும் இந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளதாம்.
பதிலுக்கு சேலை தருவோம்-முத்தலிக்:
எங்களுக்கு ஜட்டிகளை அனுப்பி வைத்தால், அவர்களுக்கு பதிலுக்கு சேலை தருவோம் என ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முத்தலிக் கூறுகையில், எங்களுக்கு ஜட்டிகளை அனுப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதற்காக நாங்கள் கவலைப்படவில்லை.
எங்களுக்கு இதுபோல அனுப்பும் பெண்களுக்கு நாங்கள் பதிலுக்கு சேலைகளை வழங்குவோம். எங்களது மகளிர் பிரிவு ஏற்கனவே 150 சேலைகளை வாங்கி வைத்துள்ளது.
எங்களுக்கு ஜட்டிகளை அனுப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளவர்களின் மன நிலையைத்தான் இந்தப் போராட்டம் காட்டுகிறது.
இந்தியக் கலாச்சாரத்தின் அடிமட்டம் தேய்ந்து வருகிறதே என்று நான் கவலைப்படுவது குறித்து அவர்கள் பேச முன்வராமல், இதுபோல போராட்டம் நடத்துவது கவலை தருகிறது.
கொள்கை அளவில் அவர்கள் எங்களுடன் விவாதிக்க முன்வர வேண்டும். நாடு முழுவதும் இதுகுறித்து விவாதிக்க நாங்கள் தயார்.
காதலர் தினத்தன்று நான் பெல்காம் மற்றும் தார்வாட் நகரங்களில் இருப்பேன். ஆனால் எனது அமைப்பின் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் சுற்றி வருவார்கள். எங்கெல்லாம் காதல் ஜோடிகள் தென்படுகிறார்களோ அங்கு சென்று அவர்களைப் பிடித்து பெற்றோரிடமோ அல்லது போலீஸாரிடமோ ஒப்படைப்பார்கள் என்றார் முத்தலிக்.