பஸ்களை எரிப்போர், அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போரை கண்டதும் சுட உத்தரவு

சனிக்கிழமை, பிப்ரவரி 21, 2009, 9:51 [IST]
சென்னை: தமிழகத்தில் பஸ்களை எரித்தும், தாக்கியும், அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தும் வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில டிஜிபி கே.பி.ஜெயின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் சுப்பிரமணியன்சாமி தாக்கப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக 19-ந் தேதியன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த சம்பவங்களை அடுத்து மாநிலத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடவாமல் இருக்க தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறையினர் செய்துள்ளனர்.

இருப்பினும் இப்பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, மாநிலத்தில் ஒரு சில இடங்களில் சமூக விரோதிகள் பஸ்கள் மற்றும் அரசு சொத்துக்களை கல் வீசி சேதப்படுத்துதல், தீ வைத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, பொது சொத்துக்களை சேதப்படுத்தி, பொதுமக்களின் உயிருக்கும் மற்றும் உடமைக்கும் சேதம் விளைவிக்க முயற்சிக்கும் சமூக விரோதிகளை கண்டதும் சுடவும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு கெடவில்லை - டிஜிபி

உயர்நீதிமன்ற வன்முறையால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை பாதிக்கப்படவில்லை என்று மாநில டிஜிபி ஜெயின் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற வன்முறையில் சிக்கி காயமடைந்த போலீஸார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை டிஜிபி ஜெயினும், மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணனும் சந்தித்து நலம் விசாரித்தனர்.

அப்போது செய்தியாளர்கள் அவர்களை நிறுத்தி வன்முறை தொடர்பாக கேட்டனர்.

அதற்கு டிஜிபி கூறுகையில்,

ஐகோர்ட்டில் நடந்த வக்கீல்கள்-போலீஸ் மோதல் சம்பவத்தால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எதுவும் பாதிக்கப்படவில்லை. அந்த பிரச்சினை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வக்கீல்கள் மீது ஐகோர்ட் போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது நிலவரம் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.

கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

ஐகோர்ட் சம்பவத்தில் போலீசார் மிகவும் பொறுமை காத்தார்கள். உயர் அதிகாரிகள் அனைவரும், போலீசாரை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். நீதிபதி தாக்கப்பட்ட பிறகும், போலீஸ் நிலையம் தீ வைத்து கொளுத்திய பிறகும்தான் தடியடி நடத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றார்.
  Read:  In English 
150 வக்கீல்கள் மீது வழக்கு

இதற்கிடையே, உயர்நீதிமன்ற வன்முறை தொடர்பாக 150 வக்கல்கள் மீது கொலை முயற்சி, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம், போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, சட்டவிரோதமாக திரண்டு கலவரத்தை ஏர்படுத்தியது, அரசு ஆவணங்களை தீவைத்துக் கொளுத்தியது, குற்றம் செய்யும் நோக்கத்தோடு அரசு அலுவலகத்திற்குள் புகுந்தது போன்ற 7 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets