காத்திருக்கும் இடதுசாரிகள்-இன்னும் கூப்பிடாத அதிமுக
சென்னை: இரண்டு முறை வெற்றி பெற்ற மதுரை தொகுதியை வழங்க வேண்டும் என அதிமுகவிடம் கோரியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால், மு.க.அழகிரியைக் காரணம் காட்டி மதுரையில் நாம் நின்றால்தான் வெல்ல முடியும் என மதுரை அதிமுகவினர், தலைமைக்கு எடுத்துக் கூறியுள்ளனராம்.
மதுரை தொகுதியில் தற்போதைய எம்.பி. மோகன். மதுரை தொகுதி மக்களிடம் நல்ல செல்வாக்குடன் திகழ்கிறார். தொடர்ந்து 2 முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றார் மோகன்.
எந்தவித புகாருக்கும் ஆளாகமால், சில நல்ல திட்டங்களை மதுரை பக்கம் கொண்டு வந்து சேர்த்தவர் மோகன். கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி இருந்தது. ஆனால் தற்போது அதிமுக அணிக்கு வந்துள்ளது.
கடந்த முறை மதுரையில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ் போட்டியிட்டு மோகனிடம் தோல்வியடைந்தார்.
தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக அணி வந்திருப்பதால் மதுரையில் யார் போட்டியிடுவார்கள் என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
மதுரை கண்டிப்பாக தங்களுக்கு வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறதாம். ஆனால் மு.க.அழகிரியைக் காரணம் காட்டி, அவரை சமாளிக்க நாம் நின்றால் தான் சரியாக இருக்கும்.
இத்தொகுதியில், சிபிஎம் போட்டியிட்டால் நிச்சயம் தோல்விதான் கிடைக்கும் என மதுரை அதிமுகவினர் ஜெயலலிதா காதுகளுக்குக் கொண்டு சென்றுள்ளனராம்.
மதுரையில் அழகிரி வைத்ததே சட்டம் என்ற நிலை உள்ளது. எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இங்கு போட்டியிட அனுமதித்தால், ஒரு சீட்டை நாமே வலியக்க இழப்பதைப் போலாகும். அழகிரியின் பலத்திற்கு சமமான பலம் நமக்கு மட்டுமே உள்ளது. எனவே இங்கு அதிமுகவே போட்டியிட வேண்டும் என்று அதிமுகவினர் மேலிடத்திற்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியினரோ வேறு மாதிரியாக நினைக்கிறார்களாம். திருமங்கலம் தொகுதியையும் இப்படித்தான் மதிமுகவிடமிருந்து பெற்று அதிமுக போட்டியிட்டது. முடிவு எப்படி இருந்தது. எனவே இதெல்லாம் சொத்தைக் காரணங்கள். கண்டிப்பாக தொகுதியை எங்களுக்கேத் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறுகிறார்களாம்.
இதற்கிடையே, மதுரை தொகுதி சிபிஎம்முக்குக் கிடைத்தாலும் மீண்டும் மோகனுக்கு சீட் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. வேறு வேட்பாளரை நிறுத்தும் முடிவில் இருக்கிறதாம் சிபிஎம்.
வட சென்னையில் தா.பாண்டியன் போட்டி?:
இதற்கிடையே வட சென்னை, திருப்பூர், நாகப்பட்டிணம் ஆகிய ஆகிய 3 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளதாக அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வட சென்னை தொகுதி கிடைத்தால் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனே போட்டியிடுவார் என்றும் தெரிகிறது.
அதே போல திருப்பூர் கிடைத்தால் அங்கு சுப்பராயனும், நாகை கிடைத்தால் அங்கு செல்வராஜும் நிறுத்தப்படலாம்.
இன்னும் கூப்பிடாத அதிமுக:
இதற்திடையே அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்த மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் குழுக்களை அமைத்துவிட்டு காத்துக் கொண்டுள்ளன.
இந்தக் குழுக்களுடன் இன்று அதிமுக தேர்தல் குழு பேச்சு வார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை பேச்சு நடக்கவில்லை.
இது குறித்து கம்யூனிஸ்ட் தரப்பில் கேட்டபோது, நாங்கள் பேசத் தயாராக இருக்கிறோம். ஆனால், இதுவரை அதிமுகவிடமிருந்து அழைப்பு வரவில்லை என்றனர்.
அதிமுகவாச்சே.. எப்போ வேணா அழைப்பு வரலாம்...