ஒரிசாவில் பயங்கர சூறாவளி: 15 பேர் பலி-200 பேர் படுகாயம்
ராஜ்கனிகா: ஒரிசா மாநில கடற்கரை பகுதியில் கடும் சூறாவளி வீசியதில் 15 பேர் பலியாயினர். 200 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 120 கிமீ., தூரத்தில் இருக்கிறது ராஜ்கனிகா நகரம். கடலோர பகுதியான இங்கு நேற்று முன்தினம் மதியம் சூறாவளி காற்று சுழற்றி அடித்தது.
இதில் அங்கிருந்த மரங்கள் வேரோடு பிடுங்கி விழுந்தன. வீட்டு கூரைகள் அனைத்தும் காற்றில் பறந்தன. அந்த பகுதியாக வந்த டிராக்டர் ஒன்றும் தூக்கி போடப்பட்டுள்ளது. அதை ஓட்டி வந்த டிரைவர் சம்பவ இடத்திலே மரணமடைந்தார்.
சுமார் 200 மீ., அகலத்தில் 3 கிமீ., பகுதியில் இருந்த 4 கிராமங்களை இந்த சூறாவளி துவம்சம் செய்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.
சுமார் 5 நிமிடம் நேரம் நீடித்த இந்த சூறாவளிக்கு 15 பேர் பலியாயினர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஒரிசாவில் இதற்கு முன் நிகழ்ந்த சூறாவளிகளிலே இதுதான் கடுமையான சூறாவளி என வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிவாரண உதவிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.