குஜராத், பிகார், ம.பியில் பாஜகவே வெல்லும்-என்டிடிவி கருத்துக் கணிப்பு
குஜராத்: மோடியே...
குஜராத்தில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியதில் முதல்வர் நரேந்திர மோடி மீது 79 சதவீத மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். 51 சதவீதம் பேர் மதவாதத்தை மோடி கட்டுப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளனர்.
முதல்வர் பதவிக்குச் சிறந்தவர் யார் என்ற கேள்விக்கு மோடிக்கு 45 சதவீதத்தினரும் மூத்த காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங் வகேலாவுக்கு 31 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த மக்களளைத் தேர்தலில் பாஜக 14 இடங்களிலும் காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றன. இப்போது மோடிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால் பாஜக 20 இடங்களிலும் காங்கிரஸ் 8 இடங்களிலும் வெல்லும் என கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
மொத்தமுள்ள 26 தொகுதிகளில் காந்தி நகர் தொகுதி தவிர மற்ற தொகுதிகள் அனைத்துக்கும் வேட்பாளரை தேர்வு செய்தவர் மோடியே ஆவார். இதில் பெரும்பாலானவர்கள் புது முகங்கள், 5 பேர் சமீபத்தில் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்கள். காந்தி நகரி்ல் அத்வானி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
பிகாரில் நிதிஷ் அலை:
பிகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி சார்பில் முதல்வராக உள்ள நிதிஷ் குமாருக்கு பெரும் ஆதரவு உள்ளது. இங்கு மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 30 இடங்களை பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியே வெல்லும் என்றும்,
மீதமுள்ள 10 இடங்களில மட்டுமே லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தியும் வெலலும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
கடந்த தேர்தலில் இங்கு லாலு-பாஸ்வான்-காங்கிரஸ் கூட்டணியே 29 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது. இப்போது காஙகிரஸ் அங்கு தனித்து போட்டியிடுகிறது. இதனால் தான் லாலுவுக்கு பெரும் சரிவு ஏற்படப் போகிறது என கருத்துக் கணிப்பு கூறுகிறது.
மத்திய பிரதேசத்திலும்...
மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 இடங்களில் 19 முதல் 20 இடங்களை பாஜகவே கைப்பற்றும் என்று என்டிடிவி கருத்துக் கணிப்பு கூறுகிறது.
அங்கு ஆட்சியில் உள்ள முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான் தலைமையிலான பாஜக அரசு மீது மக்களிடையே பெரும் திருப்தி நிலவுவதால் பாஜக முன்னிலையில் உள்ளது என கருத்துக் கணிப்பு கூறுகிறது.