மூன்றாவது அணி கூட்டத்தில் பவார் பங்கேற்கிறார்
புவனேஸ்வர்: ஒரிசாவில் நடக்கும் மூன்றாவது அணி கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கலந்து கொள்வார் என அக்கட்சியின் பொது செயலாளர் தாரிக் அன்வர் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் வரும் 3ம் தேதி ஒரிசா மாநிலம் புவனேஸ்வர் சென்று, பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக்குடன் ஓரிசா மாநிலத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேசவிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதம வேட்பாளராக மன்மோகனை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என சரத்பவார் தெரிவித்து, காங்கிரசுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்தார்.
இதிலிருந்து காங்கிரஸ் மீள்வதற்குள் மூன்றாவது அணி பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார் சரத்பவார். நாளை புவனேஸ்வரில் நடக்கும் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என தேசியவாத காங்கிரஸ் பொது செயலாளர் தாரிக் அன்வர் தெரிவித்துள்ளார்.
அந்த கூட்டத்தில் சிபிஎம் பொது செயலாளர் பிரகாஷ் காரத், சந்திரபாபு நாயுடு ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
இதை தொடர்ந்து சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மூன்றாவது அணியில் சேரும் வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே முலாயம், லாலு ஆகியோர் கைவிட்ட நிலையில் சரத்பவாரும் தற்போது கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தி வருவது காங்கிரஸ் வட்டத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.