அண்ணா பல்கலை எம்.பி.ஏ, எம்.சி.ஏ நுழைவுத் தேர்வு-விண்ணப்பம் வினியோகம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ., எம்.டெக்., எம்.சி.ஏ. படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது.
அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள், சென்னை, திருச்சி, கோவை, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். ஆகிய இடங்களும், தனியார் சுயநிதி கல்லூரிகளில் இருந்து கிடைக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களும் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
நுழைவுத் தேர்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மே மாதம் 30-ந் தேதியும், மற்ற படிப்புகளுக்கான தேர்வு 31-ந் தேதியும் நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.300. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 150 ரூபாய் மட்டுமே.
ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்தால் ஒவ்வொரு படிப்புக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்ப விநியோகம் நேற்று பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. பூர்த்தி செய்து கொடுப்பவர்களுக்கு உனடியாக புகைப்படம் எடுக்கப்பட்டு ஸ்பாட்டிலேயே ஹால் டிக்கெட்டையும் கையில் கொடுத்து விடுகின்றனர்.
முதல் 15 மாணவ-மாணவிகளுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர்ஜவகர் வழங்கினார்.
நேரில் வராதவர்கள் விண்ணப்பத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏப்ரல் மாதம் 25-க்குள் அனுப்ப வேண்டும். அவர்களுக்கு தபால் மூலம் ஹால்டிக்கெட் அனுப்பி வைக்கப்படும்.