திமுக தேர்தல் அறிக்கையில் 'சேது'!
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை நாடு முழுவதும் பிரபலமானது. ஏகப்பட்ட இலவச அறிவி்ப்புகள் அதில் இடம் பெற்றிருந்ததே அதற்கு காரணம்.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பழகன் வெளியிட அதை முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டார்.
தேர்தல் அறிக்கையைப் பெற்றுக் கொண்ட கருணாநிதி, லோக்சபா தேர்தலில் திமுகவின் கோஷமாக வெற்றி நமதே என்ற கோஷம் இருக்கும் என்றார்.
தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாட்டு மக்களுக்கு பயன் தரும் வகையில் அமைந்திட வேண்டும். வேண்டுமென்றே திட்டமிட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளை திசை திருப்பப்படுவதை தடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் நேரமும், நோக்கமும் நாட்டு மக்களின் செல்வமும் வீணாகாமல் தடுத்திட வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் உரிமைகளுக்கு ஊனம் ஏற்படாமல் தடுத்து, அனைத்து கட்சிகளுடன் கலந்து பேசி நாடாளுமன்ற விதிகளை மாற்றி அமைக்க வேண்டும்.
சேதுகால்வாய் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.
நதிகள் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ வழி வகை செய்ய திமுக தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் இலங்கை போர் நிறுத்தம் ஏற்பட திமுக தொடர்ந்து வலியுறுத்தும்.
கச்சத்தீவில் தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். இதற்குரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.
சுயமரியாதை திருமண சட்டத்தை அகில இந்திய அளவில் செயல்படுத்த வேண்டும்.
மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வரும் புதிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்துவோம்.
சென்னையில் புயல், வெள்ள பேரிடர் நிவாரண ஆணையத்தை அமைக்க வேண்டும்.
திருப்பூர், ஈரோடு பகுதியில் உள்ள சாயபட்டறைகள் மற்றும் ஆடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து கடலில் கலக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.
தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்தி, மேம்படுத்த வேண்டும்.
சேலம், தஞ்சை, வேலூர், ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் உள்ள ராணுவ விமான தளங்களை பயணிகள் விமான நிலையங்களாக மாற்றி அமைக்க வேண்டும்.
இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் சார்பில் மையம் ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் குழாய் மூலம் எரிவாயு சப்ளை செய்யப்பட வேண்டும்.
மாநிலங்களுக்கு மத்திய அரசின் ஒட்டுமொத்த வரிவருவாய் 60 சதவிகிதத்தை அளிக்க வேண்டும்.
மீனவர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.
சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையத்தை முன்னோடி திட்டமாக தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
புலம்பெயர்ந்தோர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.
சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டத்தை மாமல்லபுரம் வரை விரிவுபடுத்த வேண்டும்.
சென்னை- கோவை, சென்னை- மதுரை ஆகிய இடங்களுக்கு அதிவேக புல்லட் ரெயில்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
தஞ்சை- அரியலூர் உள்ளிட்ட புதிய ரெயில் பாதைகளை அமைக்க வேண்டும்.
நெல் மற்றும் கரும்புக்கு கூடுதல் விலை அளிக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயரை நீ்க்க வேண்டும். இட ஒதுக்கீட்டு விதிகள் நீதித்துறையின் கேள்விக்கு உட்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் கிடைக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்தத் திட்டங்களை நிறைவேற்ற திமுக பாடுபடும் என்று கூறப்பட்டுள்ளது.