பாமக வேட்பாளர்கள் இன்று பிரசாரத்தில் குதித்தனர்
திருவண்ணாமலை: பாமக வேட்பாளர்கள் இன்று காலை பிரசாரத்தைத் தொடங்கினர். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட்டு காடுவெட்டி குரு தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணியிலேயே முதல் ஆளாக, 7 தொகுதிகளையும் கேட்டு வாங்கி சத்தம் போடாமல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டது. ஆனால் கூட்டணியில் பிற கட்சிகளுக்கு (சிபிஐ தவிர) இன்னும் தொகுதிப் பங்கீடு முடியாமல் குழம்பத்தில் புலம்பிக் கொண்டுள்ளன.
இந்த நிலையில் பாமக வேட்பாளர்கள் இன்று காலை பிரசாரத்தைத் தொடங்கினர்.
திருவண்ணாமலையில் போட்டியிடும் காடுவெட்டி குரு, அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட்டு பூஜை போட்டு பிரசாரத்தைத் தொடங்கினார்.
மாவட்ட பாமக நிர்வாகிகள், வன்னியர் சங்க பிரமுகர்களுடன் மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை முதலில் சந்தித்து ஆதரவு கோரினார்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியும் இன்று காலை பிரசாரத்தைத் தொடங்கினார்.
குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் உள்ள கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், அப்பகுதிகளில் பிரபலமாக உள்ளவர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார் மூர்த்தி.
பல்லாவரம் பகுதியில் சென்றபோது அங்கு தென்பட்ட மகளிர் சுய உதவிக் குழு பெண்களைப் பார்த்து அவர்களிடம் மாம்பழம் சின்னத்தில் மறக்காமல் வாக்களியுங்கள் என்று கைகூப்பி கும்பிட்டு வாக்கு கேட்டார். இதையடுத்து பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர்.
கள்ளக்குறிச்சி வேட்பாளர் தன்ராஜும் இன்றே பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.