நீதிமன்றத்தில் சம்பத்துக்காக வாதாடிய வைகோ
சென்னை: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நாஞ்சில் சம்பத்தை விடுவிக்க வேண்டும் என வைகோ அவரது சார்பில் சென்னை நீதிமன்றத்தில் வாதாடினார்.
மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கடந்த மார்ச் 1ம் தேதி திருப்பூரில் நடந்த கூட்டம் ஒன்றில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையி்ல் அடைத்தனர்.
இதை எதிர்த்து அவருடைய மனைவி சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து, அவரை விடுவிக்குமாறு கேட்டு கொண்டார்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை நீதிபதிகள் தர்மாராவ், செல்வம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது நீதிமன்றத்துக்கு வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ, நாஞ்சில் சம்பத்துக்காக ஆஜராகி வாதாடினார்.
அதில், நாஞ்சில் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது தவறு. இது பழிவாங்கும் நடவடிக்கை என்றார் வைகோ.
அப்போது நீதிபதி செல்வம் குறுக்கிட்டு, இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை. வேறு நீதிபதிகளுக்கு அனுப்புகிறோம் என்றார்.
அதற்கு பதிலளித்த வைகோ, இந்த வழக்கை நீங்களே விசாரிக்கலாம். நாங்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றார். ஆனாலும் நீதிபதிகள் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை நாளை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.