விடுதலைச் சிறுத்தைகள் தனி சின்னத்தில் போட்டி
சென்னை: லோக்சபா தேர்தலில் சிதம்பரம் (தனி), விழுப்புரம ஆகிய தொகுதிகளில் தனியான, ஒரே சுயேச்சை சின்னத்தில் போட்டியிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று காலை சென்னை வேளச்சேரி தாய்மண் அரங்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஒரே சுயேச்சை சின்னத்தில்
- நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் ஒரே சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும்.
- விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளரை தேர்வு செய்யும் முழு அதிகாரம் தலைவருக்கு வழங்கப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகளின் தேர்தல் அறிக்கையும், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான விடுதலை சிறுத்தைகளின் வேட்பாளரும் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலிலும் திருமாவளவனின் கட்சி சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.