உதவி-கருணாநிதியுடன் வீரப்பன் மகள்கள் சந்திப்பு
முதல்வர் கருணாநிதியை நேற்று பல்வேறு வன்னிய அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்தனர். அவர்களுடன் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள்கள் வித்தியாராணி மற்றும் பிரபா விஜயலட்சுமி ஆகியோரும் சந்தித்தனர்.
வீரப்பனின் மகள்கள் அப்போது முதல்வரிடம் ஒரு மனுவை அளித்தனர்.
அதில், அன்புள்ள அய்யா அவர்களுக்கு வணக்கம், நாங்கள் மறைந்த வீரப்பனின் மகள்கள். எங்கள் தந்தை தங்கள்மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். தங்களுடைய ஆட்சி காலத்தில் தங்களிடம் நேரில் சரண் அடைய பெரிதும் விரும்பி இருந்தார்.
தந்தையை இழந்த பிறகு, எங்கள் தாய் முத்துலட்சுமியின் பாதுகாப்பில் இருந்தோம். இந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு கர்நாடக காவல் துறையினர் எங்கள் தாய் முத்துலட்சுமி மீது சம்பந்தம் இல்லாத பொய் வழக்கில் கைது செய்து, மைசூரில் உள்ள சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.
நாங்கள் தற்போது ஆதரவு இல்லாமல் உள்ளோம். எங்கள் தாயை நீதிமன்றம் மூலம் மைசூரில் சிறையில் இருந்து வெளியே கொண்டுவர உதவிட பணிவன்புடன் வேண்டுகிறோம்.
நான் (வித்தியாராணி) பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளேன். எனது தங்கை பிரபா விஜயா லட்சுமி பிளஸ்-1 படிக்கிறாள். எங்கள்மேல்படிப்புக்கு அரசின் சார்பில் தேவையான உதவிகளைசெய்து கொடுத்திட பணிவன்புடன் வேண்டுகிறோம் என்று கோரப்பட்டுள்ளது.