படுகொலையை வேடிக்கை பார்க்கும் உலகம்: சிங்கள தலைவர்
சென்னை: காஸாவில் 2000 பேர் கொல்லப்பட்டதை உலக மீடியாக்கள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின. ஆனால் இலங்கையில் சில வாரங்களில் மட்டும் 3000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதை எந்த உலக மீடியாவும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று இலங்கையைச் சேர்ந்த சிங்கள அரசியல் கட்சித் தலைவர் சிரிதுங்கா ஜெயசூரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஐக்கிய சோஷலிச கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் சிரிதுங்கா ஜெயசூரியா. இவர் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது இலங்கை இனப்படுகொலை குறித்து உலக மீடியாக்கள் மெளனம் சாதிப்பதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், காஸாவில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல் குறித்தும், இங்கு 2000 பேர் கொல்லப்பட்டது குறித்தும் உலக மீடியாக்கள் பக்கம் பக்கமாக எழுதின. டிவியைத் திருப்பினால் காஸா செய்திதான். உலகத் தலைவர்கள் எல்லாம் ஒரே குரலில் கண்டனம் தெரிவித்தனர்.
பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேலுக்குச் சென்று அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால் இலங்கையில் கடந்த சில வாரங்களில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இலங்கைப் படுகொலைகள் குறித்து மட்டும் எந்த உலக மீடியாவும் செய்தி வெளியிடுவதில்லை. இது வன்மையாக கண்டித்தக்கது.
யாருமே இலங்கைப் படுகொலைகள் குறித்து பேச மறுப்பது புதிராக உள்ளது. தற்போது இலங்கையில் நடந்து வரும் சண்டைக்கு பல உலக வல்லரசு நாடுகள் ஆதரவாக உள்ளன. இந்த ஆதரவு பலத்தோடுதான் அதிபர் ராஜபக்சே தொடர்ந்து அப்பாவிகளைக் கொன்று குவித்து வருகிறார்.
தீவிரவாதம் என்ற பெயரில் ஒரு இனத்தையே அழிக்கும் முயர்சி இலங்கையில் நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது நடந்து வரும் சண்டையில், ஏராளமான அப்பாவிகள் அநியாயமாக கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த அநியாய கொலைகளுக்கு ஒட்டுமொத்த இலங்கையும் துணை நிற்பது போல இலங்கை அரசு காட்டிக் கொள்கிறது. ஆனால் உண்மையில் சிங்களர்களில் பலருக்கு இந்த போரில் விருப்பமே இல்லை. அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு வருவது குறித்து அவர்கள் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இலங்கை அதிபரின் நோக்கத்தை அவர்கள் ஏற்க மாட்டார்கள்.
இவ்வாறு படுகொலைகளைச் செய்வதால் இலங்கையில் அமைதி திரும்பாது. மாறாக, ஒட்டுமொத்த நாட்டுக்குமே பேராபத்து ஏற்படும். பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும். ஏன் அதிபரே கூட இந்த செயலுக்கு பலியாகக் கூடும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
மாகாணக் கவுன்சில் தேர்தலின்போது சில மாதங்களில் போர் முடிந்து விடும் என்று இலங்கை அரசு உறுதியளித்தது. ஆனால் இன்னும் போர் முடியவில்லை. விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்த் தாக்குதல் நடைபெறுவதால் இலங்கைப் படையினரால் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசியல் தலைவர்கள் இலங்கை விவகாரத்தில் ஒருமித்து செயல்படவில்லை. இதை அவர்கள் வெளியிட்டு வரும் அறிக்கைகளே வெளிக்காட்டும். இனப் பிரச்சினையை வைத்து அவர்கள் அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் வடக்கில் உயிரிழந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு எந்தவித பலனும் ஏற்படப் போவதில்லை என்றார் சிரிதுங்கா ஜெயசூரியா.
சிரிதுங்கா யார்..?
2005ம் ஆண்டு நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் சிரிதுங்கா. 3வது இடத்தை அத்தேர்தலில் அவர் பிடித்தார்.
தொழிற்சங்க தலைவரான சிரிதுங்கா, ஐக்கிய சோசலிச கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். இலங்கை சமா சமாஜ கட்சி மற்றும் நவ சமா சமாஜ கட்சி ஆகியவற்றில் இருந்துள்ளார்.
சிங்கள இனவெறி இல்லாத ஓரிரு இலங்கை அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.