சிபிஐ வேட்பாளர்கள்: வடசென்னை- தா.பாண்டியன், நாகை- செல்வராஜ், தென்காசி-லிங்கம்
வட சென்னையில் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், நாகப்பட்டினத்தில் எம்.செல்வராஜ், தென்காசியில் லிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த 3 தொகுதிகளில் நாகப்பட்டினமும், தென்காசியும் ரிசர்வ் (தனி) தொகுதிகளாகும்.
வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக இந்த மூன்று மாவட்டங்களிலும் நிர்வாகக் குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் போட்டியிட விரும்புவர்களின் பட்டியல்கள் தயார் செய்யப்பட்டன.
கடந்த 6ம் தேதி கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. அதில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், தேசியச் செயலாளர் ராஜா, தா.பாண்டியன், மூத்த தலைவர் பெரியவர் ஆர்.நல்லக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந் நிலையில் இன்று கட்சியின் உயர்மட்ட குழுக் கூட்டம் நடந்தது. அதில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர்.
தா.பாண்டியனும், நாகப்பட்டினம் வேட்பாளர் செல்வராஜும் ஏற்கனவே இரண்டு முறை எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்.
தென்காசி வேட்பாளர் லிங்கம் ராஜபாளையம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் செயலாளராக உள்ளார்.