முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாமலை நெல்லை அதிமுக வேட்பாளர்
சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் அண்ணாமலை. ஆனால் இன்று பெரும் சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார்.
தந்தை பெயர் குமார் நாடார், 1948ம் ஆண்டு பிறந்தவர். பாவூர்சத்திரம் அருகேயுள்ள குக்கிராமமான கரிசலூரைச் சேர்ந்தவர்.
10வது வகுப்பு வரை மட்டுமே படித்தவர் அண்ணாமலை. மனைவி பானுமதி, கிருஷ்ணராஜா என்ற மகனும், கிருஷ்ணகுமாரி, கிருஷ்ணவேணி பாமா, கிருஷ்ணபவானி என 3 மகள்களும் உள்ளனர்.
இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்தவர். ஆனால் தற்போது ஹோட்டல்கள், இனிப்புக் கடை, விடுதி என வசதியாகவே உள்ளார்.
1980ம் ஆண்டு அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். 1990ம் ஆணடு கரிசலூர் கிளை கழக செயலாளராக இருந்தார்.
2000ம் ஆண்டு நெல்லை கிழக்கு மாவட்ட ஜெ பேரவை அவைத்தலைவராக இருந்தார்.
2001 முதல் 2006 வரை தென்காசி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.
2006ம் ஓருங்கிணைந்த நெல்லை மாவட்ட அவை தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டார்.
தான் வேட்பாளரனது குறித்து தென்காசியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சாதாரண குடும்பத்தில் அதுவும் குக்கிராமத்தில் பிறந்த என்னை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. தற்போது எம்.பி தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார். அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
என் மகன் திருமணத்திற்கு வந்தும் பெருமை சேர்த்தார். இது போன்ற வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும். அது எனக்கு கிடைத்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியான மதிமுகவுக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதனால் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அதற்காக சோர்வடையவில்லை.
கட்சி தலைமை அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளேன் என்றார்.