நாடு வளம் பெற கலாம் கூறும் 4 அம்சத் திட்டம்
நியூயார்க் சென்றுள்ள அப்துல் கலாமுக்கு அமெரிக்காவின் மதிப்புமிக்க பொறியியல் விருதான ஹூவர் மெடல் வழங்கப்பட்டது.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்டு கலாம் பேசினார்.
அமெரிக்க மெக்கானிக்கல் என்ஜீனியர்கள் கழகம் இந்த விருதை 1930ம் ஆண்டு நிறுவியது. விருது நிறுவப்பட்ட பின்னர் இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் ஆசியர் கலாம் என்பது இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாகும்.
நிகழ்ச்சியில் கலாம் பேசுகையில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவு், நாட்டை வளப்படுத்தவும் நாடுகள் கடுமையாக உழைத்துக் கொண்டுள்ளன. அதேசமயம், தீவிரவாதம், பயங்கரவாதம் மூலம் நாடுகளை சீர்குலைக்கும் முயற்சிகள் சிலர் தீவிரமாக உள்ளனர்.
எதிர்கால சவால்களை சமாளிக்கும் வகையில், சந்திக்கும் வகையில், சமூகத்தை பன்முகம் கொண்டதாக மாற்றி அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினையில் ஒரு தொழில்நுட்ப தீர்வு புதைந்திருக்கும் என்று முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஹெர்பர்ட் ஹூவர் சொன்னதை இந்த நேரத்தில் நாம் அனைவரும் நினைவு கூற வேண்டும்.
இந்த நேரத்தில் இந்தியாவை வளமைமிக்க, வலிமை மிக்க நாடாக மாற்ற நான்கு அம்சங்களை முன் வைக்க விரும்புகிறேன்.
இந்த நான்கு அம்சங்களும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டு செயல்பாட்டின் மூலம் சாத்தியமாகும்.
நமது நாட்டின் பொருளாதாரம் மூன்று பிரிவுகளாக உள்ளது. அந்த மூன்று பிரிவுகளையும் நான்கு கிரிடுகள் மூலம் இணைக்கலாம்.
நான்கு 'கிரிடுகள்'..
முதல் கிரிட் அறிவு. இது நமது நாட்டின் பல்கலைக்கழகங்களை, சமூக பொருளாதார நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகங்கள் ஆகியவற்றுடன் இணைக்கிறது.
அடுத்த கிரிட் சுகாதாரம். இது நமது அரசின் சுகாதார கழகங்களை, வர்த்தக நிறுவனங்கள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுடன் இணைக்கிறது.
அடுத்தது இ கவர்னன்ஸ் எனப்படும் மின் ஆளுமை. இது மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்டங்கள், தாலுகாக்கள் அளவிலான அலுவலகங்களை இணைக்கிறது.
நான்காவது புரா (PURA). அதாவது ஊரகப் பகுதிகளுக்கு நகர்ப்புறப் பகுதிகளின் வசதிகளைத் தருவது (Providing Urban Amenities in Rural Areas).
இந்த நான்கையும் நம்மால் சாதிக்க முடிந்தால் இந்தியா நிச்சயம் செழுமையான, வளமையான, வலிமையான நாடாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
உலகை அச்சுறுத்தும் இரண்டு முக்கியப் பிரச்சினைகள் என்னவென்றால், எண்ணை வளம், நிலக்கரி, காஸ் ஆகியவற்றின் பற்றாக்குறை. 2வது சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருவது.
குடிநீர் மேலாண்மை...
இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று குடிநீர் மேலாண்மை. குடிநீர்ப் பிரச்சினைக்கு இந்தியா நிரந்தர தீர்வு கண்டால், அமைதி, வளமை, செழுமை, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றை இந்தியாவால் சாதிக்க முடியும்.
மனிதகுலம் தழைத்தோங்க தண்ணீர் அவசியம். குடிநீர், விவசாயம், தொழில்துறை மற்றும் துப்புறவு ஆகியவற்றுக்கு தண்ணீர் மிகவும் அவசியம்.
இந்த லட்சியங்கள் அனைத்திலும் நம்மால் வெல்ல வேண்டுமானால் நம்மிடம் அறிவிப்பூர்வமாக சிந்திக்கக் கூடிய, திறமையான தலைவர்கள் இருக்க வேண்டும். அதுபோன்ற தலைமை இருந்தால்தான், நாம் பெரும் மாற்றங்களை சந்திக்க முடியும், சாதிக்க முடியும் என்றார் கலாம்.