திமுக-காங் கப்பல் மூழ்குகிறது-திரிபுரா முதல்வர்
மதுரை: மதுரை தொகுதியில் திமுகவினர் நடத்தும் அராஜக வன்முறையும், ஜனநாயக படுகொலையும் அக்கட்சியின் பலவீனத்தையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் எனும் மூழ்கும் கப்பலில் திமுக தொற்றி கொண்டுள்ளது என்று திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் குற்றம் சாட்டிள்ளார்.
திரிபுராவில் இடதுசாரிகளின் கூட்டணி ஆட்சி நடந்தது வருகிறது. அம்மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாணிக் சர்க்கார் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோகனை ஆதரித்து மதுரை தொகுதியில் அவர் பிரசாரம் செய்தார். அப்போது நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
இந்த தேர்தலில் தேசிய அளவில் பெரிய கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் காங்கிரசும், பாஜகவும் தனிமைப்பட்டுள்ளன. காங்கிரசை லாலுவும், ராம் விலாஸ் பாஸ்வானும், முலாயம் சிங்கும் கைவிட்டு விட்டார்கள்.
அதே போன்று, பாஜகவை நவீன் பட்நாயக் உள்ளிட்ட அவர்களது முந்தைய நண்பர்கள் எல்லோரும் கைவிட்டு விட்டார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் எனும் மூழ்கும் கப்பலில் திமுக தொற்றிக் கொண்டு நிற்கிறது. இந்தத் தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் வன்முறையை ஏவி விடுகிறார்கள்.
ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது...
மதுரை தொகுதியில் இவர்கள் நடத்தும் அராஜகம் வரலாறு காணாதது. இதை மதுரை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். திமுக வேட்பாளருக்கு எதிராக மதுரை வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களியுங்கள் என்றார் அவர்.