வழிய சென்று ஆதரவு கடிதம் தந்த சமாஜ்வாடி
டெல்லி: மத்தியில் ஆட்சியமைக்க சமாஜ்வாடி கட்சியின் ஆதரவைப் பெற காங்கிரஸ் முயற்சிக்கவே இல்லாத நிலையில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங் இன்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியமைக்க ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை கொடுத்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 262 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆட்சியமைக்க வெறும் 10 இடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
இதையடுத்து உத்தர பிரதேசத்தில் அதிக தொகுதிகளை வென்றுள்ள முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, முழு ஆதரவு தர தயாராக இருப்பதாக தானே முன் வந்து கூறியது. ஆனால், அதை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ஏற்க மறுத்துவிட்டனர்.
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், 21 தொகுதிகளில் வென்றுள்ள உத்தர பிரதேச முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியிடம் மட்டும் ஆதரவு கேட்டார்.
இதையடுத்து இன்று லக்னெளவில் நிருபர்களிடம் பேசிய மாயாவதி கூறுகையில், மதசார்பற்ற கட்சிகளை பலப்படுத்துவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் என்னுடன் நேற்று பேசினார். அந்த வகையில் மத்தியில் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து எந்த நிபந்தனையுமின்றி ஆதரவளிக்க நான் தயாராக உள்ளேன் என்றார்.
இதையடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி 283 எம்.பி.க்களின் ஆதரவுடன் முழு மெஜாரிட்டி பெற்றுள்ளது.
சமாஜ்வாடி கட்சியின் பரம அரசியல் எதிரியான மாயாவதி மதச்சார்பற்ற அரசு அமைவதற்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்ததை அடுத்து சமாஜ்வாடியினர் தாங்களும் மதச்சார்பற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சி்ங் இன்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்து, காங்கிரஸ் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக கடிதம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் தனித்தனியாக போட்டியிட்ட பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய இரு கட்சிகளும் தற்போது காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.