தேர்தல்-மக்கள் தந்த சாதனையும், சோதனையும்
டெல்லி: சமீபத்தில் முடித்த நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய கட்சிகளின் செயல்பாடுகள் பற்றி ஒரு பார்வை:
நாடாளுமன்ற தேர்தல் முடிவு காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு மகிழ்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அந்த கூட்டணியை சேர்ந்த பல கட்சிகள் சிறப்பாக வெற்றி பெற்றுள்ளன. அதே நேரத்தில் மூன்றாவது அணி மற்றும் சில மாநில கட்சிகள் தேர்தலில் மண்ணை கவ்வியுள்ளன.
திமுக நம்பர்-1...
இந்த தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் அதிக சதவீத வெற்றி பெற்ற கட்சி என்ற பெருமையை திமுக பெற்றுள்ளது. இந்த தேர்தலில் அக்கட்சி போட்டியிட்ட 21 தொகுதிகளில் 18ல் வென்றுள்ளது. அதாவது திமுக 85.71 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரசுக்கு அடுத்த படியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும் கடந்த முறை நடந்த தேர்தலை விட தற்போது இரண்டு சீட் கூடுதலாக பெற்றுள்ளது.
தேர்தலில் வென்ற சதவீதத்தை வைத்து பார்க்கும் போது இரண்டாவது இடத்தை ஒரிஸ்ஸாவின் பிஜூ ஜனதா தளம் பெற்றுள்ளது. இந்த கட்சி போட்டியிட்ட 18 தொகுதியில் 14ல் வென்றுள்ளது. அவர்களி்ன் வெற்றி சதவீதம் 77.77 ஆக உள்ளது.
மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவர்கள் 28 இடத்தில் போட்டியிட்டு 19ல் வென்றுள்ளனர். வெற்றி சதவீதம் 67.85 ஆகும்.
18 ஆண்டுக்கு பின்...
இந்த தேர்தலில் 440 தொகுதிகளில் போட்டியிட்ட 206ல் வென்ற காங்கிரஸ் கட்சி நாட்டின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 200 தொகுதிகளுக்கு மேல் வென்றுள்ளது. முன்னதாக நரசிம்மராவ் காலத்தில் காங்கிரஸ் 1991ல் நடந்த தேர்தலில் 244 தொகுதிகளில் வென்றிருந்தது.
மேலும், காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை விட தற்போது 61 தொகுதிகள் கூடுதலாக பெற்றுள்ளது. அவர்களது வெற்றி விகிதம் 46.81 ஆகும்.
பாஸ்வானுக்கு சோதனை...
அதே நேரத்தில் இந்த தேர்தலில் அதிகபட்ச சோதனையை சந்தித்த கட்சி என்றால் ராம்விலாஸ் பாஸ்வானின் லேக் ஜன சக்தி தான். இந்த தேர்தலில் லாலுவுடன் கூட்டணி வைத்து கொண்டு நான்காவது அணி என்ற கோஷத்துடன் 80 தொகுதியில் போட்டியிட்ட இவரது கட்சியை மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டனர். ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை.
அடுத்து மூன்றாவது அணியை பிடித்து எப்படியாவது தேர்தலுக்கு பின்னர் பிரதமராகிவிட வேண்டும் என்ற கனவுடன் களமிறங்கிய மாயாவதிக்கு உத்தர பிரதேசத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இவரது காட்சி நாடு முழுவதும் 503 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் இவர்களாக தான் இருக்கும்.
ஆனால், இவர்களுக்கு மக்கள் 21 தொகுதிகளில் மட்டும் தான் அங்கீகாரம் வழங்கினர். இங்கு மட்டுமே மாயாவதியின் பகுஜன் சமாஜ் சுமாரான ஆதரவு கிடைத்தது. நாடு முழுவதும் உத்தர பிரதேசத்தை தவிர்த்து அவர்கள் போட்டியிட்ட 423 தொகுதிகளிலும் அவர்கள் தோல்வி தான் கிடைத்தது.
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி 23, காங்கிரஸ் 20 தொகுதிகளி்ல் வென்றன. இதையடுத்து பிரதமர் கனவு கண்ட இவரால் அடுத்த முறை மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கட்சியின் வெற்றி விகிதம் 4.17 மட்டுமே.
ஆட்டம் கண்ட இடதுசாரி...
இவர்களை தொடர்ந்து இந்த தேர்தலில் இடதுசாரிகளின் நிலைமை படுமோசமாகிவிட்டது. கடந்த முறை கைவசம் 53 தொகுதிகளை வைத்து கொண்டு ஆட்டம் போட்டு, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஆட்சியை கவிழ்க்க முயன்ற இவர்கள் இம்முறை இருக்கும் இடம் தெரியாமல் இருப்பார்கள்.
தங்களது ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களான மேற்கு வங்கம், கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியிடம் வாங்கிய அடி தான் இதற்கு காரணம். நாடு முழுவதும் போட்டியிட்ட இவர்கள் 24ல் மட்டுமே வென்றுள்ளனர். இது கடந்த முறையை விட சுமார் 29 அதிகமாகும். இந்த தேர்தலில் அதிக தொகுதிகளை இழந்த கட்சி இடதுசாரிகள் தான்.
கடந்த தேர்தலில் 24 இடங்களில் வென்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முக்கிய பொறுப்பான ரயில்வே துறையை தன்வசம் வைத்து தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்த லாலு, தற்போதைய தேர்தலுக்கு முன்னதாக தொகுதி பங்கீட்டின் போது காங்கிரசுக்கு 3 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறி அவர்கள் இழிவு படுத்தினார்.
எப்படியிருந்த லாலு...
இதையடுத்து காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. விளைவு 44 போட்டிகளில் போட்டியிட்ட லாலுவுக்கு வெறும் 4 சீட் தான் கிடைத்துள்ளது. பீகாரிலும் பாஜக கூட்டணி ஆள்வதால் தேசிய அளவில் அவரது முக்கியத்துவம் வெகுவாக குறைந்துவிட்டது. எப்படியிருந்த லாலு இப்படி ஆயிட்டார் என பேசும் அளவுக்கு அவரது நிலைமை பரிதாபமாகிவிட்டது.
அதேபோல் தேவ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கர்நாடகாவில் பலத்த அடி வாங்கியுள்ளது. இவர்கள் நாடு முழுவதும் 38 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 3ல் மட்டுமே வென்றுள்ளது. 65 தொகுதியில் போட்டியிட்ட சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 9ல் மட்டுமே வென்றுள்ளது.
தமிழகத்தில் 23 தொகுதியில் போட்டியிட்ட அதிமுக 9 தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது. என்றாலும் கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத அதிமுக இம்முறை 9 இடங்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் 138 தொகுதிகளி்ல் வென்ற பாஜக இம்முறை 22 தொகுதிகளில் வெற்றியை பறிகொடுத்துள்ளது. 116 தொகுதியில் மட்டுமே வென்றுள்ள அவர்கள் கூட்டணி கட்சிகளும் தடுமாறியதை அடுத்து ஆட்சி கனவை காங்கிரசிடம் பறிகொடுத்துள்ளனர்.