பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பைனலுக்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார். அவர் சுவீடனின் சோடர்லிங்கை எதிர்கொள்கிறார்.நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் பாரிசில் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அர்ஜென்டினாவின் ஜூவன் மார்டின் டெல் பெட்ரோவை எதிர் கொண்டார்.இதில் முதல் செட்டை பெடரர் 3-6 என இழந்தார். இதையடுத்து சுதாரித்து விளையாடிய அவர் அடுத்த செட்டை 7-6 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். ஆனால், மூன்றாவது செட்டை 2-6 என இழந்த பெடரர் நான்காவது செட்டை 6-1 என வென்றார். இப்படி இருவரும் மாற்றி மாற்றி செட்களை கைப்பற்ற போட்டி பரபரப்பாக இருந்தது.இதையடுத்து பைனலுக்கு முன்னேறுபவர் யார் என்பதை நிர்ணயிக்கும் ஐந்தாவது சுற்று படு திரிலாக இருந்தது. அதில் பெடரர் 6-4 என வென்றார். இறுதியில் 3-6, 7-6, 6-2, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் பைனலுக்கு முன்னேறினார். நாளை நடக்கும் பைனலில் அவர் சுவீடனின் சோடர்லிங்கை எதிர்கொள்கிறார்.கடந்த மூன்று ஆண்டுகளாக பைனல் வரை முன்னேறி ஸ்பெயின் வீரர் நடாலிடம் கோப்பையை கோட்டைவிட்ட பெடரர் இம்முறை நடால் வெளியேறிவிட்ட நிலையில் முதன் முறையாக பிரெஞ்ச் ஓபனில் கோப்பை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பெடரர் வென்றால் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற ஏழாவது வீரர் என்ற பெருமை பெறலாம். மேலும், தற்போது 13 கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ள அவர் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் கைப்பற்றிய வீரர் என்ற அமெரிக்காவின் பீட்டர் சாம்ப்ராஸ் (14) சாதனையை சமன் செய்யலாம்.