சேது திட்டத்தை நிறுத்தி வைக்க சு.சாமி கோரிக்கை
சென்னை: ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான ஆய்வுகள் முடியும் வரை அத்திட்டத்தை பிரதமர் நிறுத்தி வைக்க வேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் பிரதமருக்கு சேது சமுத்திரத் திட்டம் குறித்து கடிதம் எழுதியுள்ளேன்.
சேது சமுத்திரத் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ளது. இந்த நிலையில் வாசன் பேசியிருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.
இந்தத் திட்டம் சாத்தியமானதல்ல என்று ஏற்கனவே தேசிய கடலியல் கழகம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆர்.கே.பச்சோரி கமிஷனும் கூட இந்தத் திட்டம் அடிப்படை தொழில்நுட்ப ஆய்வை மேற்கொள்ளாமல் திட்டமிட்பட்டிருப்பதாக கூறியுள்ளது. இந்தத் திட்டத்தால் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தியில் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து முறையாக ஆய்வு செய்யப்படவில்லை என்றும் பச்சோரி கமிஷன் தெரிவித்துள்ளது.
கடலியல் மாற்றம் காரணமாகவே ஏற்கனவே தனுஷ்கோடியில் பாதி நீரில் மூழ்கியது. இதுபோன்ற மாற்றங்களால்தான் இந்தோனேசியாவிலும், இதர ஆசிய கடலோரப் பகுதிகளிலும் சுனாமியும் ஏற்பட்டது. இதை மனதில் கொள்ள வேண்டும்.
ராமர் பாலத்தை இடித்து விட்டு அங்கு அமைக்கப்படும் கால்வாய் வழியாக பெரிய பெரிய கப்பல்களை செல்ல அனுமதித்தால், கடலில் மிகப் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படும். இதனால் பெருமளவிலான உயிர்ச் சேதமும், இயற்கைச் சீற்றமும் ஏற்பட வழி பிறந்து விடும்.
இந்த நிலையில் வாசன் அவர் இஷ்டத்திற்கு திட்டத்தை நிறைவேற்றுவோம் என முழங்கியுள்ளார். ஆனால் ராமர் பாலத்தை இடிக்காமல் இத்திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான ஆய்வுகள் முழுமையாக முடியும் வரை இத்திட்டத்தை நிறுத்தி வைப்பதே நல்லது என்று பிரதமருக்கு நான் கோரிக்கை விடுத்துளளேன் என்று கூறினார் சாமி.