தெ.ஆப்பிரிக்காவில் இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர் கொலை
அவரது பெயர் கிரண். ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், ஆரேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். ஜோஹன்னஸ்பர்க்கில் இவர் பணியாற்றி வந்தார்.
வியாழக்கிழமையன்று மாலை தனது அலுவலகத்திலிருந்து பணி முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் இவரை சுட்டு விட்டனர்.
உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் கிரண். அங்கு அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக முன்னர் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று கிரண் இறந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.
தந்தை அதிர்ச்சி..
கிரண் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மகன் இறந்த செய்தி குறித்து தந்தை சங்கரய்யா கூறுகையில், இதை எங்களால் நம்ப முடியவில்லை. கஷ்டப்பட்டு படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து வந்தான் எனது மகன் என்றார் கண்ணீருடன்.
கடந்த 2 ஆண்டுகளாக கிரண் தென் ஆப்பிரிக்காவில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் ஆந்திரா வந்த அவர் ஜூன் 27ம் தேதிதான் ஜோஹன்னஸ்பர்க் கிளம்பிச் சென்றார்.
கிரணின் தந்தை சங்கரய்யாவும், தாயாரும் ஜோஹன்னஸ்பர்க் செல்லவுள்ளனர். அவர்களுக்கு பாஸ்போர்ட், விசா பெற்றுத் தரும் முயற்சியில் வாரங்கல் மாவட்ட எஸ்.பி. சஞ்னார் ஈடுபட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் வழிப்பறி, கொலை உள்ளிட்டவை மிகவும் சாதாரணமானவை. சாதாரண திருட்டுக்காக கொலை செய்யும் வழிப்பறிக் கும்பல்கள் அங்கு அதிகம். அப்படிப்பட்ட கும்பல் ஏதேனும் கிரணைத் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.