மாணிக் பார்மில் வாரத்திற்கு 1400 தமிழர்கள் அநியாயமாக சாவு

சனிக்கிழமை, ஜூலை 11, 2009, 14:54 [IST]
லண்டன்: பாதுகாப்பற்ற குடிநீர், சுகாதார சீர்கேடுகள் உள்ளிட்டவற்றால், கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ள மாணிக் பார்ம் முகாமில் வாரத்திற்கு 1400 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர் என்று லண்டன் டைம்ஸ் இதழ் கூறியுள்ளது.

சர்வதேச உதவிக் குழுக்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது டைம்ஸ்.

நலன்புரி கிராமங்கள் என இந்த முகாம்களை வர்ணிக்கிறது இலங்கை அரசு. ஆனால் மிக மிக மோசமான சுகாதாரமற்ற சூழலே இங்கு காணப்படுவதாக டைம்ஸ் கூறுகிறது.

தண்ணீர் மூலம் பரவும் தொற்று நோய்கள்தான், குறிப்பாக டயரியாதான் பலர் உயிரிழக்க முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறு.

அடிப்படை மனிதாபிமான உதவிகளைக் கூட இலங்கை அரசு செய்யாமல் உள்ளதையே இது நிரூபிப்பதாகவும் அந்த செய்தி குற்றம் சாட்டுகிறது.

மாணிக் பார்ம் முகாமில் வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களையும் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்லவிடாமல் தடுத்து வருகிறது இலங்கை அரசு.

தற்போது அங்குள்ள நிலைமை மிக மோசமானதாக இருப்பதாகவும், அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என்றும் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

உணவுக்கும், குடிநீருக்கும் நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கும் அவலம் காணப்படுகிறது. இவற்றைப் பெற முடியாமல் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தவிக்கின்றனர்.

இடைத் தங்கள் முகாம்களுக்கு மட்டுமே உதவிக் குழுக்கள் உதவிகளைச் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். வியாழக்கிழமையன்று செஞ்சிலுவைச் சங்கத்தினரை இந்தப் பணிகளில் ஈடுபட அரசு அனுமதிக்கவில்லை.

ஆயிரக்கணக்கான குழந்தைகள் சத்துக் குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணிக் பார்ம் முகாமில் 70 பேருக்கு ஒரு கழிப்பறைதான் உள்ளது. சர்வதேச நெறிமுறைப்படி 20 பேருக்கு ஒரு கழிப்பறை இருக்க வேண்டும்.

பருவ மழை தற்போது இன்னும் வேகம் பிடிக்கவில்லை. அது வந்து விட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என சர்வதேச நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இந்த நிலையில்தான் வாரந்தோறும் 1400 பேர், அதாவது தினரி 200 பேர் உயிரிழந்து கொண்டிருக்கும் மிக அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது பணிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. பலி எண்ணிக்கை குறித்து மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகாமல் தடுக்கவே இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருப்பதாக தெரிகிறது.

நேரடிப் போரை முடித்து விட்டது இலங்கை அரசு. ஆனால் குடிநீர், சாப்பாடு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கொடுக்காமல், தமிழ் மக்களை மெல்ல மெல்ல கொன்றழிக்கும் மறைமுகப் போரில் இப்போது தீவிரமாக இறங்கியிருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST