அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பில்லை!
டெல்லி: அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஏர் இந்தியாவில் 31000 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 5000 பேருக்கும் மேல் இந்த ஆண்டு இறுதியில் பணி ஓய்வு பெறுகின்றனர். இவர்களுக்கு பதில் புதிய ஆட்கள் இனி வேலைக்கு எடுக்கப்பட மாட்டார்கள் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
அடுத்த மூன்றாண்டுகளுக்கு இருக்கிற பணியாளர்களைக் கொண்டே சமாளிப்பதென்றும் நிலைமை சீரடைந்த பிறகு புதிய ஊழியர் சேர்ப்பு குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அரசு அறிவுறுத்தியதாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளது ஏர் இந்தியா.
தற்போது பணியாளர் சம்பளமாக மட்டுமே ஆண்டுக்கு ரூ.3100 கோடி செலவாகிறது ஏர் இந்தியாவுக்கு.
இதற்கிடையே பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு விமான பெட்ரோல் பாக்கியாக ரூ.542 கோடி வரை ஏர் இந்தியா செலுத்த வேண்டியுள்ளது என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
தற்போது ஏர் இந்தியா நிறுவனம் உள்ள சூழலில் இந்தத் தொகையை உடனடியாகச் செலுத்த முடியாது என்பதால், இப்போதைக்கு அதை கடன் கணக்காக மாற்றுமாறு எண்ணெய் நிறுவனங்களை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.