பொக்ரான்-2 சோதனை: விசாரணை கமிஷன் அமைக்க சந்தானம் கோரிக்கை
அவரது கோரிக்கைக்கு பல்வேறு வி்ஞ்ஞானிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
1998ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ராஜஸ்தானின் பொக்ரானில் நடந்த அணு சோதனை பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது. இது வெற்றி பெறவில்லை என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் விஞ்ஞானி சந்தானம்.
ஆனால் சோதனை முழு வெற்றி பெற்றது. எதிர்பார்த்த முடிவு கிடைத்தது என்று அப்துல் கலாம் உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதையடுத்து, அணு இயற்பியல் குறித்து கலாமுக்கு என்ன தெரியும் என்று கேட்டார் சந்தானம். இதனால் விஞ்ஞானிகளுக்குள் கருத்துப் போர் வெடித்தது.
இந்த நிலையில், விஞ்ஞானி சந்தானம் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள், பொக்ரான் சோதனையின் உண்மையை அறிந்து கொள்ள விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சந்தானம் கூறுகையில், அறிவியலில் இது இயல்பான ஒன்றுதான். ஒரு விஷயம் குறித்து சர்ச்சை எழுந்தால், உடனடியாக நடுநிலையுடன் கூடிய விஞ்ஞானிகளை வைத்து அதை ஆராய்ந்து உண்மையைத் தெரிவிப்பது அறிவியலின் ஒரு அங்கம். அதேபோல பொக்ரான் சோதனை குறித்தும் பாரபட்சமற்ற விஞ்ஞானிகள் குழுவை வைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதன் மூலம் தவறான ஒரு நம்பிக்கை மக்கள் மனதில் நிலவுவதைத் தடுக்க முடியும் என்றார் சந்தானம்.
இந்த விசாரணை நடத்துவதால், இப்படி விசாரணை நடத்துவதால் அணு ஆயுத நாடு என்ற பெயரை இந்தியா இழக்க நேரிடுமே என்று கேட்டபோது, இமேஜை வைத்துக் கொண்டோ, கற்பனையை வைத்துக் கொண்டோ யாரும் வாழக் கூடாது. அப்படிப்பட்ட இமேஜ் நிலைக்க வேண்டுமானால், உறுதியான உண்மைகளுடன் அது இருக்க வேண்டும். பொய்யை வைத்துக் கொண்டு வாழ்வதுதான் தவறு, ஆபத்து என்றார் சந்தானம்.
இதேபோல, அணு விஞ்ஞானிகளான எம்.ஆர்.சீனிவாசன், பி.கே.அய்யங்கார், ஏ.என்.பிரசாத் ஆகியோரும் சந்தானத்தின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சீனிவாசன் கூறுகையில், சந்தானத்தின் புகார்கள் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து விளக்க வேண்டியது ஆர்.சிதம்பரம் மற்றும் அனில் ககோத்கர் ஆகியோரின் கடமையாகும்.
பொக்ரான் சோதனை குறித்து விரிவான ஆய்வு அல்லது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
அதேசமயம், தெர்மோ நியூக்ளியார் சாதன சோதனையின்போது (ஹைட்ரஜன் பாம்) ஏற்பட்ட முடிவுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இதை பொய் என்று கூறி விட முடியாது. எனவே அணு சோதனை தோல்வி என்று நான் சொல்ல மாட்டேன். அதேசமயம், இதுதொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கம் கிடைக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.
ஏ.என்.பிரசாத் கூறுகையில், நமது நாட்டின் அணு விஞ்ஞான சமூகத்திற்கே பெரும் கெட்ட பெயரைத் தேடித் தந்துள்ளது இத்தகைய புகார்கள்.
சந்தானம் கூறியுள்ளது அனைத்தும் உண்மையாக இருந்தால், அப்துல் கலாம், ஆர்.சிதம்பரம் ஆகியோர் நாட்டுக்குத் தவறான தகவலைத் தெரிவித்து நாட்டை தவறான பாதையில் கொண்டு சென்று விட்டதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
தெர்மோநியூக்ளியார் சோதனை குறித்த அனைத்து விவரங்களையும் ஆர்.சிதம்பரமே வைத்துக் கொண்டால் மற்றவர்களுக்கு அது எப்படித் தெரிய வரும். அதுகுறித்து எப்படி விவாதம் நடத்த முடியும்.
அரசு விரைவாக ஒரு கமிட்டியை அமைத்து பொக்ரான் சோதனை குறித்த முழு விவரங்களையும் வெளிக் கொண்டு வர முயல வேண்டும். இந்தக் குழுவில் பாரபட்சம் இல்லாத வி்ஞ்ஞானிகள் மட்டுமே இடம் பெற வேண்டும்.
இந்த கமிட்டியின் விசாரணையில், தெர்மோ நியூக்ளியார் சோதனை தோல்வி அடைந்தது உண்மை என்று தெரிய வந்தால், அந்த சோதனையை நடத்தத் தூண்டிய அப்போதைய அரசு, நாட்டை ஒட்டுமொத்தமாக ஏமாற்றி மோசடி செய்து விட்டது என்றுதான் அர்த்தம்.
கலாமுக்கு என்ன தெரியும்- சேத்னா கேள்வி
இதற்கிடையே, முக்கிய அணு விஞ்ஞானிகளில் ஒருவரான ஹோமி சேத்னா கூறுகையில், சந்தானம் கூறுவதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இந்தியா மேலும் பல சோதனைகளை நடத்த வேண்டியுள்ளது என்பதையும் நான் ஏற்கிறேன்.
சந்தானம் பொக்ரான்-2 சோதனையின் திட்ட இயக்குநராக இருந்தபோது கலாம் டி.ஆர்.டி.ஓவின் தலைவராக இருந்தார். அவர் உண்மையில் விஞ்ஞானியே அல்ல. அவருக்கு இயற்பியலும், அணு இயற்பியலும் குறித்து ஒன்றுமே தெரியாது.
ஆனால் சந்தானம் ஒரு இயற்பியல் வல்லுனர். அப்படிப்பட்ட சந்தானம் கூறுவதை தவறு என்று கலாமால் எப்படிக் கூற முடியும். குடியரசுத் தலைவராக இருந்தவர், அரசியல் தலைவர் என்பதால் எதை வேண்டுமானாலும் கலாம் பேசலாமா என்றார் சேத்னா.