200 கிலோடன் திறன் கொண்ட அணுகுண்டு தயாரிக்க முடியும்-ககோத்கர்
மும்பை: 1998ல் நடந்த அணு சோதனை முழு வெற்றிதான். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. இந்தியாவால் 200 கிலோடன் திறன் கொண்ட அணு குண்டுகளைத் தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளார் அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கர்.
1998ல் பொக்ரானில் நடந்த அணு குண்டு சோதனை குறித்து பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இதுகுறித்து விளக்கினார் ககோத்கர்.
அப்போது அவர் கூறுகையில், 1998ல் நடந்த சோதனையின்போது முழு இலக்கையும் விஞ்ஞானிகள் எட்டினர். அதில் வெற்றியும் பெற்றனர்.
இந்தியாவால் 200 கிலோடன் திறன் கொண்ட அணு குண்டுகளைத் தயாரிக்க முடியும். எனவே 1998ல் நடந்த சோதனை முழு வெற்றி பெற்றது என்பதை மறுபடியும் தீர்க்கமாக தெரிவிக்க விரும்புகிறேன். நமது நோக்கம் அந்த சோதனையின்போது நிறைவேறியது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
200 கிலோ டன் திறன் கொண்ட அணு குண்டு மற்றும் ஹைட்ரஜன் குண்டுகளை நம்மால் தயாரிக்க முடியும். அந்தத் திறமை நம்மிடம் உள்ளது.
பொக்ரான்-2 அணு சோதனைகள் குறித்த சர்ச்சை தேவையில்லாதது என்றார் ககோத்கர்.
1998ல் அணு சோதனை நடந்தபோது பாபா அணு ஆய்வு மையத்தின் இயக்குநராக இருந்தவர் ககோத்கர் என்பது குறிப்பிடத்தக்கது.