போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க வீடு வீடாக சோதனை!
தமிழகத்தில் ஒரு கோடியே 99 லட்சம் ரேஷன் கார்டுகள் தற்போது உள்ளன. இதில் பல லட்சம் போலி கார்டுகளும் இருப்பதாக அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. ஒரே வீட்டு முகவரியில் 2 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
வாடகைக்கு விடப்படும் வீட்டு முகவரியைப் பயன்படுத்தி பலர் ரேஷன் கார்டுகள் பெற்று ரேஷன் பொருட்களை குறைந்த விலையில் வாங்கி கடைகளில் அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.
இதுபோன்ற போலி கார்டுகளை கண்டுபிடித்து ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் இந்த அதிரடி சோதனை சமீபத்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கு அலுவலர் கூறுகையில், "தணிக்கை செய்ய வரும்போது வீடு பூட்டப்பட்டு இருந்தால் அருகில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவிக்கப்படும். குடிமைப்பொருள் அதிகாரிகள் 3 முறை வீட்டிற்கு வருவார்கள். சரியான தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
இந்த தணிக்கை போலி கார்டுகளை அகற்றுவதற்காக நடத்தப்படுவதால் முறையாக கார்டு உள்ளவர்கள் பயப்பட தேவையில்லை. ஒருவேளை அவர்கள் கார்டும் நீக்கப்பட்டு இருந்தால் தகுந்த ஆவணங்களுடன் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு சென்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
சென்னை நகரில் உள்ள 16 மண்டலங்களில் திருவொற்றியூர், மயிலாப்பூர், வில்லிவாக்கம், சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, பரங்கிமலை, தியாகராய நகர், ஆவடி ஆகிய 8 மண்டலங்களில் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம், ஜார்ஜ் டவுண் பகுதிகளில் 100 சதவீத தணிக்கை நடந்துள்ளது.
ராயபுரம், மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, அம்பத்தூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இன்று முதல் வீடு வீடாக ஊழியர்கள் சென்று ஆய்வு செய்கிறார்கள்.
2010-ம் ஆண்டுக்கான புதிய ரேஷன் கார்டு குறித்த அறிவிப்பு டிசம்பர் மாதத்தில் தெரிவிக்கப்படும். இதுவரை கார்டு பெறாதவர்களிடமிருந்தும் அப்போது விண்ணப்பம் பெறப்படும்.
தற்போதுள்ள ரேஷன் கார்டுகளின் காலம் வருகிற டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.