மதுராவில் இரு ரயில்கள் மோதல்-22 பேர் பலி

புதன்கிழமை, அக்டோபர் 21, 2009, 9:17 [IST]
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் இரு ரயில்கள் மோதிக் கொண்டதில் 22 பேர் பலியாயினர். 24 பேர் காயமடைந்தனர்.

மதுரா ரயில் நிலையத்துக்கு வெளியே இன்று காலை 5.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது.

மதுரா ரயில் நிலையத்தை மேவார் எக்ஸ்பிரஸ் ரயில் நெருங்கிக் கொண்டிருந்தபோது யாரோ ஒரு பயணி ஆபாய சங்கிலியை இழுத்துள்ளார். இதையடுத்து அந்த ரயில் அவசரமாக நிறுத்தப்பட்டது.

இந் நிலையில் அதே பாதையில் கோவா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. ஆனால், முன்னால் வந்த ரயில் நிறுத்தப்பட்டிருந்ததால் கோவா எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்த சிவப்பு சிக்னல் போடப்பட்டது.

ஆனால், அதை கவனிக்காத அதன் என்ஜின் டிரைவரும், துணை டிரைவரும் ரயிலை தொடர்ந்து இயக்கினர். இதையடுத்து அந்த ரயில் மேவார் எக்ஸ்பிரஸ் ரயில் மீது பயங்கரமாக மோதியது.

இதில் இரு ரயில்களின் பெட்டிகளும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து சின்னாபின்னமாயின. மோதிய வேகத்தில் இரு ரயில்களும் கவிழ்ந்துவிட்டன.

இதில் இதுவரை 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. 24க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

ரயில் பெட்டிகளை உடைத்து பயணிகளை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றனது. மீட்புப் பணியில் ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மமதா நிதியுதவி அறிவிப்பு...

பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் மருத்துவ சிகி்ச்சைக்கான முழு செலவையும் ரயில்வே ஏற்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
  Read:  In English 
இந்த விபத்தையடுத்து மதுரா வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விபத்து குறித்து விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் மமதா உத்தரவிட்டுள்ளார்.
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets