முன்னாள் எம்.பி. மோகனின் உடல் தகனம்- தலைவர்கள் அஞ்சலி
மதுரை: சென்னையில் மரணமடைந்த முன்னாள் சிபிஎம். எம்.பி. மோகனின் உடல் நேற்று மதுரை தத்தனேரியில் தகனம் செய்யப்பட்டது.
உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிபிஎம் கட்சியின் முன்னாள் எம்.பி. பி.மோகன் வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு அவருடைய வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு குடும்பத்தார், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்து வரப்பட்டது. அங்கு மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மு.க.அழகிரி உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
சிபிஎம் செயலாளர் வரதராஜன், சிபிஐ நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லகண்ணு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின்னர் நேற்று மாலை இறுதி ஊர்வலம் கிளம்பியது. தத்தனேரி மயானத்தைச் சென்றடைந்ததும், அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு மோகனின் மகன் பகத்சிங் தீமூட்டினார்.