அழகிரி மீதான வழக்கு-மோகன் இறப்பு சான்றிதழ் கோரும் நீதிமன்றம்
சென்னை: மதுரை முன்னாள் எம்.பி. மோகனின் மரணச் சான்றிதழை தாக்கல் செய்யமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை தொகுதியில் மு.க.அழகிரி (தி.மு.க.), வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி சமீபத்தில் மறைந்த மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மோகன் மரணமடைந்தார்.
இந்த நிலையில், நீதிபதி வி.தனபாலன் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை தொடர்ந்த மோகன் அண்மையில் மரணமடைந்தது தொடர்பாக அவரது வக்கீல் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், உடல் நலக் குறைவு காரணமாக மோகன் கடந்த 30-ந் தேதி இறந்துவிட்டார். இதனை பதிவு செய்து கொண்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்ட (1951) பிரிவு 112-ன் கீழ் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து வழக்கை தொடர்ந்த மோகன் இறந்துவிட்டதால் அவரது இறப்பு சான்றிதழை 2 வாரத்திற்குள் மனுதாரர் தரப்பு வக்கீல் தாக்கல் செய்ய வேண்டும். இதுதொடர்பாக ஐகோர்ட்டு பதிவுத் துறை 4 வாரத்திற்குள் சட்டப்படி அறிவிப்பாணை வெளியிட வேண்டும். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 112ன் கீழ், தேர்தல் வழக்கு தொடர்ந்தவர் இறந்துவிட்டால் அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யலாம். ஆனால், அதற்கு முன்பு உயர்நீதிமன்றம் ஒரு அறிவிப்பாணையை வெளியிட வேண்டும்.
அந்த அறிவிப்பாணை வெளியான 14 நாட்களுக்குள், மனுதாரருக்கு மாற்றாக அந்த வழக்கை தொடர்ந்து நடத்த யாராவது விரும்பினால் அவர்கள் மனு செய்யலாம். அந்த மனுவை பரிசீலித்து உயர்நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.