எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கிறாராம்.. ராகுலையே பிரதமராக்கி விடலாமே-அமர்சிங்

சனிக்கிழமை, நவம்பர் 21, 2009, 12:58 [IST]
டெல்லி: ஒவ்வொரு முக்கியப் பிரச்சினைக்கும் ராகுல் காந்தி சிறந்த தீர்வைத் தருகிறார் என்று காங்கிரஸ் கட்சி நினைத்தால் பேசாமல் அவரையே பிரதமராக்கி விடலாம் என்று நக்கலடித்துள்ளார் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அனைத்து முக்கியப் பிரச்சினைகளையும் ராகுல் காந்திதான் சரியாகத் தீர்க்கிறார் என்று காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது, பேசி வருகிறது. கரும்பு விலை தொடர்பான அவசரச் சட்டமாக இருந்தாலும் சரி, நிவாரண உதவிகள் அறிவிக்கப்படுவதாக இருந்தாலும் சரி, எல்லாமே ராகுலால்தான் சரியான தீர்வைக் காண்கின்றன என்று காங்கிரஸ் கூறுகிறது.

இதற்குப் பேசாமல் ராகுல் காந்தியையேய பிரதமராக்கி விடலாமே காங்கிரஸ். எல்லாவற்றையும் அவரே சரி செய்கிறார் என்றால் தனியாக எதற்கு ஒரு பிரதமர். பேசாமல் ராகுலே பிரதமராக பதவியேற்றுக் கொள்ளலாம்.

பிரதமர் ராகுல் காந்தியிடம் பிரச்சினைகளைக் கொண்டு செல்லவும், பேசவும் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றார் அமர்சிங்.
  Read:  In English 
கரும்பு விலை தொடர்பான அவசரச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கூட்டணிக் கட்சியான திமுகவும் இந்த விஷயத்தில் எதிர் முகாமுக்குத் தாவியுள்ளது. விவசாயிகள் இதை ஏற்க முடியாது, ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் இதுகுறித்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. ஆனால் அரசு கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தது.

ஆனால் நேற்று ராகுல் காந்தி போய் பிரதமரைப் பார்த்தார், பேசினார். உடனே, விவசாயிகளுக்கு பாதகமாக எதையும் இந்த அரசு செய்யாது, நிச்சயம் சட்டம் திருத்தப்படம் என அறிவித்தார் பிரதமர். இதுதான் அமர்சிங்கை கடுப்பாக்கி விட்டது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets