ஐபி, ரா தலைவர்களுடன் சிஐஏ தலைவர் லியான் பனீட்டா சந்திப்பு
டெல்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் தலைவர் லியான் பனீட்டா, ரா மற்றும் ஐபி தலைவர்களுடன் இன்று பேச்சு நடத்தினார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளால் எழுந்துள்ள மிரட்டல்கள் உள்ளிட்டவை குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது முக்கியத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
ரா எனப்படும் ரிசர்ச் அன்ட் அனாலிசிஸ் விங் இயக்குநர் கே.சி.வர்மாவுடன் இன்று பிற்பகல், பனீட்டா 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். தீவிரவாதத்திற்கான எதிரான ஒத்துழைப்பு, லஷ்கர், ஹுஜி, ஜெய்ஷ் இ முகம்மது போன்ற தீவிரவாத அமைப்புகள் குறித்த தகவல்கள் பரிமாற்றம் குறித்து இப்பேச்சுவார்த்தையின்போது ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் ஐபி எனப்படும் இன்டலிஜென்ஸ் பீரோவின் தலைவர் ராஜீவ் மாத்தூருடன் ஒரு மணி நேரம் பனீட்டா ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையும் நேற்று அவர் சந்தித்துப் பேசினார்.