ராகுல் பட் விவகாரத்தை கவனிப்பதாக பிரதமர் உறுதி- மகேஷ் பட்
மும்பை: ஹெட்லி வழக்கில் ராகுல் பட் பெயரை போலீஸார் இழுத்திருப்பது குறித்து உரிய முறையில் கவனிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளதாக தயாரிப்பாளர் மகேஷ் பட் தெரிவித்துள்ளார்.
ஹெட்லி விவகாரத்தில் ராகுல் பட்டின் பெயரும் அடிபடுகிறது. அவருக்கும், ஹெட்லிக்கும் தொடர்பு இருப்பது தொலைபேசி உரையாடல் மூலமாக நிரூபணமானது. மேலும் பாலிவுட் நடிகைகள் சிலரை ஹெட்லிக்கு ராகுல் பட் அறிமுகப்படுத்தி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த வழக்கில் ராகுல் பட்டை ஒரு சாட்சியாக போலீஸாரும், என்.ஐ.ஏ அதிகாரிகளும் சேர்த்துள்ளனர்.
மேலும் அவர் மும்பையை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்செட் ஆன ராகுல் பட்டின் தந்தை மகேஷ் பட் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதி முறையிட்டார். அவர் இதில் தலையிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். இதற்கு உடனடியாக பிரதமரின் உதவியாளர் பதில் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து மகேஷ் பட் கூறுகையில், எனது கடிதத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் சாதகமான முறையில் 24 மணி நேரத்திற்குள் பதிலளித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இனிமேல் எல்லாம் சரியாக நடக்கும் என நம்புகிறேன்.
பிரதமர் சார்பில் அவரது உதவியாளர் ஜெய்தீப் சர்கார் பதில் அனுப்பியுள்ளார். அதில், கடிதத்தைப் பெற்றுக் கொண்டதாக பதிலளிக்குமாறும், தங்களது கவலை குறித்து உள்துறை அமைச்சகம் விசாரித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் மகேஷ் பட்.