2008 நவம்பரில் கொச்சியில் தங்கினார் ராணா - கேரள டிஜிபி
கொச்சி: கடந்த ஆண்டு நவம்பர் 2 நாட்கள் கொச்சியில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார் ராணா என்று கேரள மாநில டிஜிபி ஜேக்கப் புன்னூஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டி அமெரிக்காவில் கைதாகியுள்ள ஹெட்லியுடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர் ராணா. பாகிஸ்தானில் பிறந்த கனடியரான இவர் குறித்த தகவல்கள் படிப்படியாக வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொச்சியில் 2 நாட்கள் ராணா தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஜிபி ஜேக்கப் புன்னூஸ் கூறுகையில், டேவிட் ஹெட்லி கேரளாவுக்கு வந்ததற்கான அறிகுறிகள் இதுவரை தெரியவில்லை. அதேசமயம், ராணா கொச்சியில் தங்கியிருந்தது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 2 நாட்கள் அவர் தங்கியிருந்துள்ளார்.
அவரது பாஸ்போர்ட் மற்றும் விசா ஆவணங்களை இதை உறுதி செய்கின்றன. ராணா எதற்காக கொச்சி வந்தார் என்பது குறித்து விசாரித்த வருகிறோம். எங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு வழங்கி வருகிறோம் என்றார் புன்னூஸ்.
49 வயதான டேவிட் ஹெட்லியும், ராணாவும், கடந்த மாதம் சிகாகோ விமான நிலையத்தில் வைத்து எப்.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.