மதுரையை தலைநகராக்கி தென் தமிழகத்தை தனி மாநிலமாக்க கோரிக்கை!
இந்தக் கோரிக்கையை எழுப்பியவர்கள் - மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் ஆகியோர். பழ. நெடுமாறன் போன்ற தலைவர்கள் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவர்களின் கோரிக்கை என்னவென்றால் காவிரி ஆற்றை மையமாகக் கொண்டு, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வட தமிழகம் என்ற ஒரு மாநிலமாகவும், மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தென் தமிழகம் என்ற இன்னொரு மாநிலமாகவும் தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்பது.
தலைநகர் மதுரை:
தொழில் ரீதியாகவும், பொருளாதர ரீதியாகவும், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மிக மோசமான முறையில் பின்தங்கியுள்ளன. எனவே மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாநிலத்தை அமைத்தால்தான் மிகவும் பின்தங்கியுள்ள தென் தமிழகம் மேலோங்கி வர முடியும் என்பதை இந்தப் பிரிவினைக்குக் காரணமாக இந்தத் தலைவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் தமிழகத்தின் கடைக் கோடியில் உள்ளவர்கள் தலைநகரான சென்னைக்கு வந்து போவதில் ஏற்படும் அலைச்சல், செலவீனங்கள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்களையும் தீர்க்க தமிழகத்தின் தென் மாவட்டங்களை உள்ளடக்கிய தென் தமிழக மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கை.
தமிழக பிரிவினைக்கு தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் எதுவும் - பாமக தவிர - இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதால் இந்தக் கோரிக்கை பெரிய அளவில் இதுவரை மேலோங்காமல் உள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலக் கோரிக்கை வெற்றியை தொட்டு விட்டதால் தற்போது தமிழகப் பிரிவினை கோரிக்கையும் மீண்டும் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வட தமிழக, தென் தமிழக மாநில கூட்டமைப்பின் தலைவர்களான சேதுராமனும், நடராஜனும் கூறுகையில்,
காவிரி ஆற்றையொட்டி பகுதிகளை வடக்கில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட வட தமிழகமாகவும், தெற்கில் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட தென் தமிழகமாகவும் பிரிக்க வேண்டும்.
தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறாமல் அப்படியே உள்ளன. இவற்றை மேம்படுத்த விடுக்கப்பட்ட கோரிக்கைகள் ஆண்டாண்டு காலமாக நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் சென்னையிலும், சென்னையைச் சுற்றிலும்தான் அமைகின்றன.
18 தென் மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்களாகவே உள்ளன. இங்குள்ள மக்கள் ஏழ்மையின் பிடியிலிருந்து இன்னும் நீங்காமலேயே உள்ளனர்.
இவர்களின் பிரச்சினைகளையும், நலன்களையும் இதுவரை இருந்த எந்த அரசுமே தீவிரமாக கவனிக்கவே இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை.
எனவே தென் மாவட்டங்களை உள்ளடக்கிய தென் தமிழகம் அமைவது அவசியம், கட்டாயம் என்றனர்.