புயல் நாளை புயல் கரை கடக்கும்: சூறாவளியுடன் கன மழை பெய்யும்!
இது நாளை மாலையில் இலங்கை கடற்கரையை கடக்கும், மறுநாள் தமிழகத்தில் கரையைக் கடக்கும். இதனால் தென் தமிழகத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி இந்த புயல் சின்னம் நாகப்பட்டிணத்துக்கு தென் கிழக்கே 650 கி.மீ. தூரத்திலும், இலங்கையின் மட்டக்களப்பி்ல் இருந்து 350 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வலுவடைந்து வருவதோடு, மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதனால் நாளை இரவு இலங்கை கடலோரத்தில் இது கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.
அதன் பின்னர் மன்னார் வளைகுடா-தமிழக கடலோரத்தில் இந்த புயல் சி்ன்னம் நுழைந்து 13ம் தேதி தமிழகத்தில் கரையை கடக்கும்.
இதன் காரணமாக நாளை முதல் 48 மணி நேரத்துக்கு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யும். குறிப்பாக தென் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக சென்னை, கடலூர், நாகை, பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி, எண்ணூர், புதுச்சேரியில் 4ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல், மழை காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த பாதிப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல், வெள்ள மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகங்களை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது.
வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.
இந் நிலையில் இன்று ராமேஸ்வரம் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. இதனால் ராட்சத அலைகள் உருவாகி வருகின்றன. இதனால் ஒரு சரக்கு கப்பல் பாம்பன் பாலத்தின் கீழ் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.