தெலுங்கானா எதிரொலி-'எங்களுக்கும் தனி ஸ்டேட்': சூடு பிடிக்கும் மாநிலப் பிரிவினை கோரிக்கைகள்
டெல்லி: தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்கனவே எழுப்பப்பட்டு வரும் புது மாநிலக் கோரிக்கைகள் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் மத்திய அரசு பெரும் குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பெரிய மாநிலங்களைப் பிரித்து சிறிய மாநிலங்களாக்கும் கோரிக்கைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. இதுதொடர்பாக பல பகுதிகளில் இயக்கங்களும், போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பினும் அவற்றில் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டு புதிய மாநிலங்கள் அமைக்கப்பட்டன. உதாரணத்திற்கு ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், உத்தராஞ்சல் உள்ளிட்டவை.
இந்த நிலையில் தெலுங்கானாவை தனி மாநிலமாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் எதிரொலியாக நீண்ட காலமாக தனி மாநிலம் கோரி வரும் பல்வேறு பகுதிகளில் அந்தக் கோரிக்கைகள் மீண்டும் தூசு தட்டி எழுப்பப்பட்டுள்ளன.
கூர்க்கா மாநிலம்:
மேற்கு வங்க மாநிலத்தில் கூர்க்கா இனத்தவர் அதிகம் வாழும் பகுதிகளை தனியாகப் பிரித்து கூர்க்காலாண்ட் என்ற மாநிலம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது.
விதர்பா:
மகாராஷ்டிராவில் விதர்பா பகுதியைத் தனியாகப் பிரித்து தனி மாநிலம் அமைக்க கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.
புந்தல்கண்ட்:
அதேபோல ஏற்கனவே உத்தராஞ்சல் மாநிலத்திற்காக தங்கள் மாநிலத்தின் பல பகுதிகளை இழந்த உ.பியும், மத்தியப் பிரதேசமும் புந்தல்கண்ட் தனி மாநிலக் கோரிக்கைப் பிரச்சினையை சமீப காலமாக எதிர்கொண்டு வருகின்றன.
உ.பி, ம.பியில் உள்ள பந்தா, சித்ரகூட், ஜான்சி, லலித்பூர், சாகர் ஆகியவற்றை இணைத்து புந்தல்கண்ட் மாநிலம் அமைக்க வேண்டும் என கோரப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் இது உள்ளது.
போஜ்பூர்-மிதிலாஞ்சல்:
இதேபோல கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள பகுதிகளைப் பிரித்து போஜ்பூர் மாநிலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.
அதேபோல பீகாரில், மிதிலாஞ்சல் என்ற தனி மாநிலக் கோரிக்கையும் வலுத்து வருகிறது.
ஹரித் பிரதேஷ்:
அதே போல மேற்கு உத்தரப் பிரதேசத்தின் 20 மாவட்டங்களைப் பிரித்து ஹரித் பிரதேஷ் என்ற மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டுள்ளது.
செளராஷ்டிரா:
குஜராத்தில் உள்ள செளராஷ்டிர பகுதிகளைப் பிரித்து தனி செளராஷ்டிரா மாநிலம் அமைக்கும் கோரிக்கையும் உள்ளது.
மேற்கு வங்கம், அஸ்ஸாமில் உள்ள சில பகுதிகளைப் பிரித்து கிரேட் கூச் பிகார் மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
கூர்க்:
கர்நாடகத்தில் கூர்க் பகுதியைப் பிரித்து தனி கூர்க் மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.
இப்படி நாடு முழுவதும் தனி மாநிலக் கோரிக்கைள் பெருமளவில் உள்ளன. இவற்றில் சில மட்டுமே நிறைவேறியுள்ளன. மற்றவை அப்படியே கிடப்பில் உள்ளன.
தற்போது தெலுங்கானாவுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இந்தப் புது மாநிலக் கோரிக்கைகள் மீண்டும் உயிர் பெற்று மத்திய அரசுக்கு பெரும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.
மாவாயதி ஆதரவு:
இதற்கிடையே பெரிய மாநிலங்களைப் பிரித்து தனித்தனியான சிறிய மாநிலங்களை உருவாக்கினால் அது தேசத்துக்கு நல்லது என்று உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைப் பிரித்து ஹரித் பிரதேஷ், பூர்வாஞ்சல், புந்தேல்கண்ட் ஆகிய மாநிலங்களை உருவாக்கினால் அதை ஆதரிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.