'கொடநாட்டில் கொரட்டை விட்ட ஜெ'-திருமா!
வந்தவாசி தொகுதி இடைத் தேர்தல் திமுக வேட்பாளர் கமலக்கண்ணனை ஆதரித்து பிரசாரம் செய்து அவர் பேசுகையில்,
முதல்வர் கருணாநிதி தனது 86 வயதிலும் 25 வயது இளைஞரைப் போல பம்பரமாக சுற்றிச் சுழன்று ஏழை, எளிய மக்களுக்காக பணியாற்றி வருகிறார். இலவச கலர் டி.வி., சமத்துவபுரம், ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம் போன்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
இப்போது புதிதாக உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். இதனால் ஏழை, எளிய சாமானிய மக்கள் அப்பல்லோ, ராமச்சந்திரா போன்ற பெரிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கிராமத்தில் மணியகாரரிடம் பெற்ற வருமான சான்று மற்றும் ரேஷன் கார்டை காட்டினால் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் கிடைக்கிறது.
இந்தியாவிலே கூட்டணி கட்சித் தலைவர்களை மதிக்கும் ஒரே தலைவர் கருணாநிதிதான். அவரைப்போல வேறு யாரும் கூட்டணி கட்சித் தலைவர்களை மதிப்பதில்லை. அதனால்தான் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறிவிட்டது.
ஜெயலலிதா கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரையும் மதிப்பதில்லை. நாங்கள் அந்தக் கூட்டணியில் இருந்தபோது போயஸ் தோட்டத்திற்கு சென்று 3 நாட்கள் காத்திருந்தும் அவரைப் பார்க்க முடியவில்லை.
ஆனால், முதல்வர் கருணாநிதியை வாரத்திற்கு 2 முறை சந்தித்துப் பேசுகிறேன். அவரை அடிக்கடி சந்திப்பதுடன் சும்மாவாவது அரை மணி நேரம் பேசிவிட்டு வருவோம். தனது 86 வயதில் ஓய்வெடுக்கப் போகிறேன், உங்களை சந்திக்க நேரமில்லை என்று ஒருபோதும் முதல்வர் கருணாநிதி சொன்னதே இல்லை.
ஆனால், ஜெயலலிதா நாடராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு 6 மாதம் கொடநாட்டுக்குச் சென்று கொரட்டை விட்டார். ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டு மக்களைப் பற்றியோ, ஈழத் தமிழர்களைப் பற்றியோ, முல்லைப் பெரியாறு, காவிரி ஆற்றுப் பிரச்சனை குறித்தோ, அவ்வளவு ஏன்.. தனது கட்சியைப் பற்றியோ, தொண்டர்களைப் பற்றியோ கூட கவலையில்லை. நிம்மதியாக ஓய்வெடுக்கிறார்.
ஆனால், முதல்வர் கருணாநிதியோ இரவு, பகல் பாராமல் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரது கரத்தை வலுப்படுத்துவோம் என்றார்.