புதுச்சேரியில் இருந்து காரைக்காலை பிரிக்க போராட்டம்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. போராட்டங்களும் நடந்து வருகின்றன.
தற்போது தனி தெலுங்கானா கோரிக்கைக்கு மத்திய அரசு இசைவு தெரிவித்துள்ள நிலையில் காரைக்கால் போராட்டக் குழுவினர் தங்களின் கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.
காரைக்கால் போராட்டக் குழுவின் சார்பில் வக்கீல் செல்வ சண்முகம் இதுகுறித்து கூறுகையில்,
'ஆந்திரா மாநிலத்தை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை, காரைக்கால் போராட்டக்குழு வரவேற்கிறது. அதேபோல், காரைக்கால் மாவட்டத்தை, தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் ஆணையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
காரைக்கால் மாவட்டத்தை புதுச்சேரி அரசு 50 வருடமாக புறக்கணித்து வருகிறது. இதனால்தான், தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க கோருகிறோம். மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி, மாகி, யானத்தை விட காரைக்கால் பின்தங்கியுள்ளதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
எனவே, மத்திய அரசு காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் முடிவை, இந்த மாதத்திற்குள் வெளியிடவேண்டும். இல்லாவிட்டால், ஜனவரி மாதம் அறவழியில் போராட்டம் நடத்துவோம் என்றார்.