தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்-உள்துறை: ஆந்திரா தலைநகர் ஏது?-4 நகர்கள் பரிசீலனை
நிருபர்களிடம் அவர் கூறுகையில், தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டதாக வரும் தகவல்கள் உண்மையல்ல.
புதிய மாநிலத்துக்கு தெலுங்கானா பகுதியில் உள்ள ஹைதராபாத் தான் தலைநகராக இருக்கும்.
உண்மை நிலைமையை மக்கள் உணரும்போது எல்லா போராட்டங்களும் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என்றார்.
அவசரபட மாட்டோம்-பிரதமர்:
இவர் இவ்வாறு கூறினாலும், இன்று தன்னை சந்தித்த ராயலசீமா, கடலோர ஆந்திர மாவட்டங்களைச் சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தெலுங்கான விஷயத்தில் மத்திய அரசு அவசப்பட்டு எதையும் செய்யாது என்று உறுதியளித்துள்ளார்.
ஆந்திரா தலைநகர் ஏது?
இதனால் ஆந்திராவின் புதிய தலைநகர் எது என்ற கேள்விகள் எழுந்துள்ளது. திருப்பதி, விஜயவாடா, விசாகபட்டிணம், கர்னூல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று ஆந்திராவின் புதிய தலைநகராக்கப்படலாம் என்று தெரிகிறது. இதில் 1950களில் கர்னூல் தான் ஆந்திர தலைநகராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் சிக்கல்:!
ஹைதராபாத் தான் தெலுங்கானாவின் தலைநகரம் என்று மத்திய அரசு அறிவித்தாலும் அதை அமல்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது என்றே தெரிகிறது.
தெலுங்கானா மக்களின் தனி மாநில கனவு நனவாகும் காலம் நெருங்கி வந்தாலும், கோரிக்கை முழுவதும் நிறைவேறுவதற்கு ஹைதராபாத் விவகாரம் முட்டுக்கட்டையாகவே இருக்கும்.
ஆந்திராவுடன் தெலுங்கானா கடந்த 1955-56ம் ஆண்டுகளில் இணைக்கப்பட்டது. அப்போது மாநில தலைமையிடம் ராயலசீமா பகுதியில் உள்ள கர்னூலில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஹைதராபாத்தின் வளர்ச்சி உலக அளவுக்கு எட்டிவிட்டது.
தெலுங்கானாவுடன் ஹைதராபாத்தை விட்டு க்கொடுக்க ஆந்தர மக்கள் தயாராக இல்லை. அதேசமயம் ஹைதராபாத் இல்லாத தெலுங்கானாவை தலையில்லாத முண்டம் என டி.ஆர்.எஸ் கட்சியினர் விமர்சிக்கின்றனர். ஹைதராபாத் தங்களுக்கு தான் என்பதில் தெலுங்கானா தரப்பில் உறுதியாக உள்ளனர்.
ஆனால், 'ஹைதராபாத் என்பது ஒட்டுமொத்த ஆந்திராவின் தலைநகரம். ஒட்டுமொத்த ஆந்திர மக்களின் உழைப்பில் கட்டியெழுப்பியது தான் இன்றைய ஹைதராபாத். எனவே அதை ஒரு பகுதியினர் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது' என காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூறுகின்றனர்.
தலைநகரம் கர்னூலில் இருந்து ஹைதரபாத்தாக மாறியபோது, ஹைதராபாத்தில் எல்லா உள்கட்டமைப்பு வசதிகளுமே இருந்தன. மருத்துவமனைகள், ஒஸ்மானியா பல்கலைக்கழகம், அகண்ட நெடிய சாலைகள், உயர்நீதிமன்றம், சட்டமன்றம் என பெரும்பாலும் அரசு அலுவலகங்கள் நிஜாம் காலத்து கட்டிடங்களிலேயே இன்றும் இயங்குகின்றன.
உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவாக இருப்பது மட்டுமின்றி, தொழில் முதலீடுகள் காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அதிளவில் இங்கு விரும்பி வந்து வசிக்கின்றனர். தகவல் தொழில்நுட்பம், மருத்துவ உபகரணங்கள், ரியல் எஸ்டேட் என பல துறைகளிலும் ஹைதராபாத்தில் முதலீடுகள் குவிந்துள்ளன.
தெலுங்கானா தனி மாநிலமானால், அதற்கான புதிய தலைநகரை உருவாக்குவது அவ்வளவு சுலபமான காரியமில்லை. பல கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்புகளை அமைக்க வேண்டியிருக்கும். இதனால், ஹைதராபாத்தில் விட்டுக் கொடுப்பதில் இரு தரப்பிலும் பிரச்சனை உள்ளது.
இரு மாநிலங்கள், 1 பொது தலைநகர்:
ஹரியானா பஞ்சாப் போல ஆந்திரா, தெலுங்கானா இரண்டுக்கும் பொதுவான தலைநகரமாக ஹைதராபாத்தை விட்டுவிடலாம் என தெலுங்கு தேச தலைவர் கோடெல சிவபிரசாத் கூறியுள்ளார்.
ஆனால், ஹைதராபாத் விவகாரத்தை முடிவு செய்யப்போவது இங்கு பெரும்பான்மையாக உள்ள மஜ்லிஸ்-இ-இடஹாதுல் முஸ்லிமீன் அமைப்பினர் தான் என கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் இவர்கள் இன்னும் மௌனமாகவே உள்ளனர்.
சண்டிகர் 'பார்முலா':
பஞ்சாப், ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்குகிறது சண்டிகர். எனினும் இது எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இது ஒரு தனி யூனியன் பிரதேசமாகவே உள்ளது.
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உருவான சண்டிகர் தற்போது அற்புதமான ஒரு வாழ்விடமாக மாறியுள்ளது. இன்றைய நிலவரப்படி, மும்பை, டெல்லியில் வீடு வாங்குகிறவர்கள் கூட சண்டிகரில் வீடு வாங்குவது கடினம். வீட்டு வரி இல்லாத ஒரே ஊர் சண்டிகர் தான்.
சாலை ஆக்கிரமி்ப்புகள், கட்-அவுட்டுகள், சேரும் சகதியுமான சாலைகள் எதையும் சண்டிகரில் பார்ப்பது அரிது. மிதமான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, இதமான வாழ்விடம் என ஆர்ப்பாட்டமில்லாமல் சண்டிகர் வளர்ச்சி அடைந்துள்ளது.
தெலுங்கானா விவகாரத்தில் ஹைதராபாத் முட்டுக்கட்டையாக தொடர்ந்தால் பிரச்சனையை சமாளிக்க சண்டிகர் வழியை மத்திய அரசு பின்பற்றலாம் என்கிறார்கள்.