
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளை இந்தியாவுக்கு நுழைத்து வருவதாக இந்திய ராணுவ தலைமைத் தளபதி தீபக் கபூர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும் இந்த ஊடுருவலை எதிர்கொண்டு சமாளிக்க ராணுவம் தயாராக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற ராணுவ விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த தளபதி தீபக் கபூர் இதுபற்றி நிருபர்களிடம் கூறுகையில்,
'நமது அண்டை நாட்டினர் ஜம்மு காஷ்மீருக்குள் தொடர்ந்து தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து கொண்டே இருக்கின்றனர்.
எனினும் நமது ராணுவ பாதுகாப்பு வீரர்கள் விழிப்புடன் இருந்து அவர்களை பிடித்து வருகின்றனர். ஆனாலும் இந்த ஊடுருவல் நிற்பதாக இல்லை. தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
காஷ்மீரின் தெற்கே பிர் பஞ்சால் பகுதிகளில் இருந்து தான் அதிகளவில் ஊடுருவல் நடக்கிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இளைஞர்களை இந்தியாவிற்கு திருப்பி அழைப்பது குறித்து மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதையே நாங்களும் பின்பற்றி நடப்போம்' என்றார்.














